Ad Widget

’உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பகிஸ்கரிப்போம்’ : காணாமல் ஆக்கப்பட்வா்களின் உறவினர்கள்

“காணாமல் ஆக்கப்பட்டவா்களின் பிரச்சினைக்காக எந்த அரசியல்வாதிகளும் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத காரணத்தினால், காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களாகிய நாம், வருகின்ற உள்ளுராட்சிமன்றத் தேர்தலைப் பகிஸ்கரிக்கப் போகின்றோம்” என காணாமல் ஆக்கப்பட்வா்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று (08) 292ஆவது நாளாக கிளிநொச்சியில்தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் , பத்திரிகையாளர்களைச் சந்தித்துக் கருத்து தெரிவித்து போதே, அவா்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களின் சார்பில் அந்த அமைப்பைச் சேர்ந்த கனகரஞ்சினி மற்றும் லீலாதேவி ஆகியோர், மேலும் கூறியதாவது,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தங்களின் ஒவ்வொரு தேர்தல் விஞ்ஞாபனத்திலும் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் விடயத்தை முகவுரையாக எழுதி வாக்குகளைப் பெற்று தங்களின் சுயநல அரசியலை நடத்துகின்றார்களே தவிர, காணாமல் ஆக்கப்பட்டவா்களின் விடயத்தில் எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை.

“எனவே வருகின்ற தேர்தலிலும் எங்களுடைய விடயத்தை முன்வைத்து வாக்கு கேட்டு வருகின்றவா்களுக்கு, நாங்கள் தக்க பாடம் புகட்டவுள்ளோம். அந்த வகையில், இந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் நாம் எவருக்கும் வாக்களிக்கப் போவதில்லை.

“தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என இனி எவரும் தங்களை தாங்களே கூறிக்கொள்ளக் கூடாது. அதனை மக்கள்தான் கூற வேண்டும், மக்களின் பிரச்சினைகளில் அக்கறை இல்லாதவா்கள், ஏகபிரதிநிதிகள் அல்லர்.

“எதிர்வரும் பத்தாம் திகதி வரும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தில், யாழ்ப்பாணத்தில் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து, கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தி, ஐ.நா அலுவலகத்தில் மகஜர் ஒன்றையும் வழங்கவுள்ளோம்” என, அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Related Posts