உலக வரலாற்றில் கருப்பு அத்தியாயத்தை எழுதிய சுனாமிக்கு வயது 15!

2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி உலக மக்களையே உருக்குளைய வைத்த சுனாமி ஏற்பட்டு இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட ஆழிப்பேரலை ஆசிய நாடுகளில் வரலாறு காணாத அழிவை ஏற்படுத்தியது.

ரிக்டர் அளவுகோளில் 9.1 முதல் 9.3 மெக்னிடீயூட்டாக அந்த நில அதிர்வு பதிவாகியிருந்தது. இதன் காரணமாக இந்து சமுத்திர பிராந்தியத்தில் சுமார் 100 அடி உயர்த்திற்கு ஆழிப்பேரலை உருவாகியது.

இலங்கை, இந்தியா, மலேசியா, மியன்மார், அந்தமான், தாய்லாந்து உள்ளிட்ட 14 ஆசிய நாடுகளின் கரையோரங்கள் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டன.

ஆசிய நாடுகளில் 2 இலட்சத்து 27 ஆயிரத்து 898 உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. அத்துடன், பல்லாயிரக்கணக்கான மக்களை நிர்க்கதியாக்கியது. இந்து சமுத்திர நாடுகளில் 15 பில்லியன் டொலர்கள் பெறுமதியான சொத்துகள், உடைமைகளையும் சேதமாகின.

சுனாமி என்ற சொல்லையும் அதன் தாக்கத்தையும் 2004ஆம் ஆண்டுவரை அறிந்திருக்காத இலங்கை மக்கள், கடலில் திடீரென ஏற்பட்ட ஆழிப்பேரலையை ஆச்சரியத்துடன் பார்க்கச் சென்றனர்.இதன் காரணமாகவே பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காவகொல்லப்பட்டன.

அவ்வாறு இலங்கையை புரட்டிப்போட்ட கடல் அண்ணையின் கோரத்தாண்டவத்தால், 30 ஆயிரத்து 196 உயிர்கள் காவுகொல்லப்பட்டன. அத்தோடு, 21 ஆயிரத்து 411 பேர் காயமடைந்தனர். ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் நிர்க்கதியாகினர்.

இதன் பின்னர் சுனாமி என்னும் ஆழிப்பேரலை தொடர்பான அச்சமும் அது தொடர்பான விழிப்புணர்வும் உலக மக்களிடம் ஏற்படத் தொடங்கியது.

இன்றைய நிலையில், ஆழிப்பேரலை அனர்த்தத்தை முன்கூட்டியே கண்டறிவதற்காக பல்வேறு உலக நாடுகளில் கண்கானிப்பு மையங்கள் நிறுவப்பட்டு சமுத்திரப்பரப்பும் அதில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் அவதானிக்கப்பட்டு வருகின்றன.

சுனாமி எனப்படும் ஆழிப்பேரலையால் காவுகொல்லப்பட்ட உயிர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 26ஆம் திகதி உலக மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.

அதற்கமைய இன்றை தினமும் ஆழிப்பேரலை நினைவுகளை மீட்டும் பல்வேறு நினைவஞ்சலி நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளன.

ஆழிப்பேரலையினால் உயிரிழந்த அனைத்து மக்களையும் நினைவுகூறும் பொருட்டு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களை கோரியுள்ளது.

இதற்கமைய, இன்று முற்பகல் 9.25 தொடக்கம் 9.27 வரையில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts