நான்காவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் முற்றவெளியில் உள்ள நினைவு தூபியில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
1974ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் திகதி முதல் 10ஆம் திகதிவரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் பேராசிரியர் வித்தியானந்தன் தலைமையிலான குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
உலகலாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாமல் அப்போதைய சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம், பொலிஸாரை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தியது. இதன்போது ஒன்பது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
அந்த வகையில் இன்றைய 44 ஆம் ஆண்டு நினைவேந்ததில் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாண பெண்கள் விவகார அமைச்சர் அனந்தி சசிகரன், மாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், கஜதீபன் உட்படப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.