Ad Widget

உரிமையைத் தடுக்க முடியாது- மாவீரர் நாளில் விளக்கேற்ற தமிழ் தேசியக் கட்சிகள் அழைப்பு!

எத்தனை தடைக் கட்டளையை அரசாங்கம் பெற்றுக் கொண்டாலும் எமது மக்களின் அஞ்சலி உரிமையை தடுக்க முடியாது என அனைத்து தமிழ் தேசியக் கட்சிகளும் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளன.

இந்நிலையில், கார்த்திகை 27ஆம் திகதி மக்கள் இல்லங்களில் மாலை 6.05இற்கு நினைவுகூரலை மேற்கொள்ளுமாறு குறித்த கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் அலுவலகத்தில் அனைத்து தமிழ் தேசியக் கட்சியினரும் ஒன்றுகூடியிருந்தனர்.

இதன்படி, கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், சுரேஷ் பிரேமசந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஐங்கரநேசன், கஜதீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில், “2020ஆம் ஆண்டு மாவீரர் நாள் தொடர்பாக எட்டுக் கட்சிகள் சேர்ந்து கலந்துரையாடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மாவீரர்களை நினைவுகூர்ந்து கார்திகை 27ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகளை துயிலுமில்லங்களிலும் வீடுகளிலும் அஞ்சலித்து வந்துள்ளோம். இந்த நினைவு கூரல்களுக்குத் தடைவிதிக்குமாறு வடக்கு கிழக்கில் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்து தடை உத்தரவையும் பெற்றுள்ளனர்.

இதுதொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது எமது கடமையாகும். அதேவேளை, தென்னிலங்கையில் பாரிய அளவில் பரவியிருக்கும் கொரோனா தொற்று நோயின் தாக்கம் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் தனது தீவிரத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது.

உலகளாவிய உயிர்கொல்லியாக தீவிரமடைந்திருக்கும் கொரோனா தொற்றினைப் பொறுத்தமட்டில் எமது மக்களின் பாதுகாப்புத் தொடர்பாக எமது அனைவருக்கும் உள்ள சமூகப் பொறுப்பினை உணர்ந்திருக்கின்றோம்.

மாவீரர் நினைவு அஞ்சலி என்பது எமது அனைவரினதும் உணர்வுகளொடு இணைந்திருக்கும் முக்கியமான நிகழ்வு என்ற அடிப்படையில், அஞ்சலி செலுத்த வேண்டிய எமது தார்மீகக் கடமை என்றநிலையில் இதனை எந்த சூழ்நிலையிலும் நாம் நிறைவேற்றியே ஆகவேண்டும்.

சில வருடங்களாக அனுமதிக்கப்பட்ட இந்நிகழ்வு தொடர்பாக புதிய அரசாங்கத்தின் இந்த அணுகுமுறை ஏற்றுக்கொள்ளபட முடியாதாக அமைந்திருக்கிறது.

எத்தனை தடைக் கட்டளையை அரசாங்கம் பெற்றுக் கொண்டாலும், மரணித்த உறவுகளுக்கு நாம் அஞ்சலி செலுத்துவதற்கு எமக்குள்ள அடிப்படை உரிமையை மறுத்து நிற்க முடியாது.

இந்நிலையில், மாவீரர் நினைவுகூரல்களை தமிழர் தாயகம் எங்கும் மக்கள் தமது இல்லங்களில் இருந்தே முன்னெடுக்குமாறு வேண்டுகின்றோம். வழக்கம்போல மாலை 6.05இற்கு தமது இல்லங்களில் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துமாறு மக்களைக் கோருகின்றோம்” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts