Ad Widget

உத்தேச அபிவிருத்தி விசேட ஒழுங்கு சட்டமூலம், வடமாகாண சபையால் நிராகரிப்பு

சிறப்பு அதிகாரங்கள் கொண்ட அமைச்சர் ஒருவரை நியமிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அபிவிருத்தி விசேட ஒழுங்குகள் சட்ட மூலத்திற்கு வடமாகாணசபையும் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.

அத்துடன் மாகாணசபைகளுக்குரிய அதிகாரங்களை பறிக்கும் வகையிலும், அதிகாரப்பகிர்வுக்கு மாறாகவும் இந்த புதிய சட்டத்தை தற்போதைய மைத்ரி – ரணில் அரசாங்கம் அரசாங்கம் உருவாக்கு முயல்வதாகவும் வட மாகாண சபை குற்றம்சாட்டியுள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தற்போதைய தேசிய அரசாங்கத்தினால் அபிவிருத்தி விசேட ஒழுங்குகள் சட்டமூலத்திற்கு மாகாணசபைகளின் அங்கீகாரத்தை கோரி அரசாங்கம் சகல மாகாணசபைகளுக்கும் அதன் பிரதிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய வடமாகாண சபைக்கும் வடமாகாண ஆளுநர் ஊடாக அனுப்பு வைக்கப்பட்டிருந்த குறித்த சட்டமூலம் நேற்றய தினம் வட மாகாண சபையில் உறுப்பினர்களின் கருத்துக்களை அறிவதற்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது உரையாற்றிய முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன், குறித்த சட்டமூலத்தினை நடைமுறைபடுத்துவதன் ஊடாக மத்திய அரசாங்கம் தான் நினைத்ததை நடைமுறைபடுத்த நினைப்பதாகக் குற்றம்சாட்டினார்.

மத்திய அரசாங்கம் தான்தோன்றிதனமாக மாகாணத்தின் அதிகாரங்களை கையில் எடுப்பது தவறு என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், தாம் மேலிருந்து கீழ் வரும் அதிகாரங்களை விரும்பவில்லை என்றும், கீழிருந்து எமக்கு தேவையானவற்றை நாம் கேட்டு பெற்று கொள்ளவேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் இந்த சட்டமூலமானது மாகாணசபைகள் சட்டத்திற்கும், அதிகாரப் பகிர்வுக்கும் முரணானது என்றும் தெரிவித்துள்ள முதலமைச்சர், இதன் அடிப்படையில் இதனை தாம் எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த சட்டமூலத்திற்கு வட மாகாண சபையின் ஆழுங்கட்சி மற்றம் எதிர்கட்சி உறுப்பினர்களும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன், அரசாங்கம் ஒரு கையால் கொடுத்து மற்ற கையால் பிடுங்கும் ஒரு நாடகத்தை ஆடி வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Related Posts