Ad Widget

உதைப்பந்தாட்ட மோதல் விவகாரம்: கைது செய்யப்பட்ட 75 பேரும் எச்சரிக்கையின் பின் விடுதலை

பருத்தித்துறை பகுதியில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியில் ஏற்பட்ட முரண்பாட்டை தொடர்ந்து, குழு மோதலில் ஈடுபட சென்றார்கள் எனும் சந்தேகத்தில் பேரில் 75 பேரை பருத்தித்துறை பொலிஸார் கைது செய்து பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து, கடுமையாக எச்சரித்த பின்னர் விடுவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

பருத்துறை- உதயதாரகை மைதானத்தில் கடந்த சனிக்கிழமை காலை இடம்பெற்ற உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

பலாலி- விண்மீன் அணிக்கும், சக்கோட்டை- சென்சேவியர் அணிக்கும் இடையில் நடைபெற்ற உதைபந்தாட்ட போட்டியின் போதே குறித்த முறுகல் நிலை தோன்றியுள்ளது.

அதனை தொடர்ந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை பலாலி விண்மீன் அணி இரண்டு பேருந்துக்களில் இளைஞர் குழு சக்கோட்டை பகுதிக்கு சென்றுள்ளது.

இந்நிலையில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற முறுகல் நிலை அறிந்து அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் மோதலில் ஈடுபட வந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 75 பேரையும் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

இதன்போது அவர்கள் பயணித்த பேருந்துக்களையும் பொலிஸார் தடுத்து வைத்து, பின்னர் குறித்த 75 பேரையும கடுமையாக எச்சரித்த பின்னர் விடுவித்துள்ளனர்.

Related Posts