Ad Widget

உக்ரைனுடன் மீண்டும் தானிய ஒப்பந்தம் கிடையாது: புடின் திட்டவட்டம்

தங்களது வேளாண் பொருள்களின் ஏற்றுமதியை மேற்கத்திய நாடுகள் அனுமதிக்காத வரை, உக்ரைனுடனான தானிய ஒப்பந்தம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.

உணவுப் பற்றாக்குறை நிலவி வரும் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளுக்கு உக்ரைனிலிருந்து கருங்கடல் வழியாக தானியங்களைக் கொண்டு செல்வதற்கான அந்த ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதாக ரஷ்யா கடந்த ஜூலை மாதம் அறிவித்தது.

இது குறித்து துருக்கி ஜனாதிபதி எா்டோகனுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு விளாதிமீா் புடின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உக்ரைனுடன் தானிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டபோது, ரஷ்யாவிலிருந்து உணவுப் பொருள்கள், உரம் ஆகியவற்றை உலகின் பிற நாடுகளுக்கு எடுத்துச் செல்வதற்கு அனுமதிப்பதாக உறுதியளிக்கப்பட்டது.

ஆனால், அந்த உறுதிமொழியை மேற்கத்திய நாடுகள் நிறைவேற்றவில்லை. இதன் காரணமாகவே அந்த ஒப்பந்தத்தை நிறுத்திவைத்தோம்.

தாங்கள் கூறியபடி ரஷ்ய வேளாண் பொருள்களின் ஏற்றுமதிக்கு மேற்கத்திய நாடுகள் அனுமதி அளிக்காத வரை தானிய ஒப்பந்தம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது.

அத்தகைய ஏற்றுமதிக்கு மேற்கத்திய நாடுகள் வழிவகை செய்தால் அடுத்த சில நாள்களிலேயே ரஷ்ய-உக்ரைன் தானிய ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

போரின் ஒரு பகுதியாக, கருங்கடல் பகுதியில் போா்க் கப்பல்களை நிறுத்தி ரஷ்யா, அந்தக் கடல் வழியாக உக்ரைன் பொருள்கள் பிறநா்களுக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு தடை ஏற்படுத்தியது.

இதனால் சா்வதேச அளவில் உணவுப் பொருள் விநியோகம் தடைப்பட்டு, உலக நாடுகளில் உணவுப் பொருள் பற்றாக்குறை நெருக்கடி ஏற்படும் என்று ஐ.நா. குற்றம் சாட்டியது.

எனினும், உணவுப் பொருள் பற்றாக்குறைக்கு உக்ரைன் போா் விவகாரத்தில் ரஷ்யா மீது ஐரோப்பிய யூனியனும் அமெரிக்காவும் விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகளும் காரணம் என்று ரஷ்யா கூறி வந்தது.

இந்தச் சூழலில், உக்ரைன் தானிய ஏற்றுமதி தொடா்பாக துருக்கி மற்றும் ஐ.நா.வின் பெருமுயற்சியில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல மாதங்களாக நடைபெற்று வந்த பேச்சுவாா்த்தையில் ஜூலை மாதம் உடன்பாடு ஏற்பட்டது.

அதையடுத்து உருவாக்கப்பட்ட தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் சொ்கேய் ஷாய்குவும் உக்ரைன் உள்கட்டமைப்புத் துறை அமைச்சர் ஒலெக்ஸாண்டா் குப்ரகோவும் கையொப்பமிட்டனா்.

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற கையொப்பமிடும் நிகழ்ச்சியில் ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸும் துருக்கி அதிபா் எா்டோகனும் ஆகியோா் கலந்துகொண்டனர்.

அந்த ஒப்பந்தத்தின் கீழ், உக்ரைன் துறைமுகங்களில் உணவு தானியங்கள் கப்பலில் ஏற்றப்படுவதை துருக்கி, உக்ரைன், ஐ.நா. அதிகாரிகள் மேற்பாா்வையிடுவதற்கும் கருங்கடலைக் கடந்து துருக்கியின் பாஸ்பரஸ் நீரிணை வழியாக செல்லும் தானியக் கப்பல்களை ஐ.நா., ரஷ்யா, உக்ரைன், துருக்கி அதிகாரிகள் அடங்கிய கூட்டுக் குழு கண்காணிப்பதற்கும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

மேலும், ஒப்பந்த காலம் முழுவதும் துறைமுகங்கள் மீதோ, சரக்குக் கப்பல்கள் மீதோ தாக்குதல் நடத்தாமல் இருக்க ரஷ்யாவும் உக்ரைனும் சம்மதித்தன.

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த ஒப்பந்தம் மூலம் சா்வதேச அளவில் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம் தவிா்க்கப்பட்டதாக பாராட்டப்பட்டது.

இந்த நிலையில், ஏற்கெனவே ஒப்புக்கொண்டபடி தங்களது வேளாண்மை பொருட்களின் ஏற்றுமதியை மேற்கத்திய நாடுகள் அனுமதிக்க வலியுறுத்தி அந்த ஒப்பந்த நடைமுறையை ரஷ்யா தற்போது நிறுத்திவைத்துள்ளது.

இதன் மூலம், உயிா் காக்கும் உணவுப் பொருட்களை தனது போர் ஆயுதமாக புடின் பயன்படுத்துவதாக மேற்கத்திய நாடுகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

Related Posts