Ad Widget

ஈ.பி.டி.பி. யுடன் கூட்டுச்சேரவில்லை : சேனாதிராஜா

நாங்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் கூட்டுச் சேரவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) வல்வெட்டித்துறை, நகர சபைத் தவிசாளர் தெரிவுக்கான முதலாவது சபை அமர்வு நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “நாங்கள் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டு சேரவில்லை. சபைகளில் பெரும்பான்மையைப் பெற்ற கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என பொது அமைப்புக்கள், புத்திஜீவிகள் அனைவரும் கோரினார்கள். அதற்காக சில கட்சித் தலைமைகளுடன் பேச்சுகள் நடத்தப்பட்டது.

அந்த வகையில் நானும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பேசினேன். அப்போது பெரும்பான்மை பெற்ற இடங்களில் அந்த கட்சிகளே ஆட்சி அமைக்க வேண்டும் என அவரிடம் கூறினேன். அவரும் அதனை ஏற்றுக்கொண்டார். அதன் பிரகாரமே தற்போது தவிசாளர் தெரிவுகள் இடம்பெற்றன” என தெரிவித்தார்.

Related Posts