தமிழ் நாடு முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்களது மறைவுச் செய்தி பாரத தேசத்திற்கு மட்டுமல்ல உலகெங்கும் வாழும் ஈழத் தமிழ் மக்களுக்கும் பேரதிர்ச்சியையும், பேரிழப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்திய உபகண்டத்தில் பரந்து விரிந்து கிடக்கும் பாரத தேசத்தில் சுமார் ஏழரைக் கோடி மக்களைக் கொண்ட தமிழ்நாடு மாநிலத்தின் ஈடு இணையற்ற தலைவியாக விளங்கிய மாண்புமிகு ஜெயலிலதா அம்மையார் அவர்களது காலத்தில் தமிழகம் பல்வேறு துறைகளிலும் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கண்டது.
சவால்மிக்க இந்திய அரசியல் பரப்பில் ஆற்றலும், ஆளுமையும் மிகக் புரட்சித் தலைவியாக தனக்கென தனி முத்திரை பதித்து பாராத தேசத்தை மட்டுமல்ல, உலகையை திரும்பிப் பார்க்க வைத்த இரும்புப் பெண்மணி.
இலங்கைத்தீவில் தொடர்ச்சியான இன ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டு, நாதியற்ற நிலைக்குத் தள்ளப்பட்ட ஈழத் தமிழ் மக்கள் மீதான இனவழிப்புக்கு நீதி நிடைக்க வேண்டும் என்பதிலும், இணைந்த வடக்கு கிழக்கு தாயகத்தில் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழக்கூடிய நிலையை உருவாக்க வேண்டும் என்பதிலும் மிகவும் பற்றுறுதியுடன் செயற்பட்டார். இவை தொடர்பில் சட்டசபையில் தீர்மானங்களை இயற்றியதுடன், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் மிகவும் உறுதியான நிலைப்பாட்டுடன் ஜெயலலிதா அம்மையார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்.
அம்மையாரின் மேற்படி நடவடிக்கைகள் ஈழத் தமிழர்களுக்காக ஆறுகோடி தமிழகத் தமிழ் உறவுகள் பக்கபலமாக இருக்கின்றார்கள் என்ற ஆறுதலையும் நம்பிக்கையையும் ஈழத்திலும் உலகம் முழுவதிலும் பரந்து வாழும் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. விடுதலைக்காக ஏங்கும் ஈழத் தமிழ் மக்களின் உரிமைக்காக ஒலித்த உறுதியான பலமிக்க குரல் ஓய்ந்து போனது.
அம்மையாரில் திடீர் பிரிவினால் ஆறாத்துயரில் மூழ்கியுள்ள மக்களுக்கும், அ.இ.அ.தி.மு.க தலைவர்கள், தொண்டர்களுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் ஆழந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் வெளியிிடப்பட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்ப்ட்டுள்ளது.




