கல்விக்கு பெயர்போன யாழ்ப்பாணம் கடந்த மூன்று தசாப்த கால யுத்தம் காரணமாக பலவற்றை இழந்துள்ளதென குறிப்பிட்டுள்ள வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே, மீண்டும் பழைய நிலையை அடைவதற்கு கல்வியில் தேர்ச்சி பெறுவதோடு, அபிவிருத்திகளையும் முன்னெடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
யாழ்.வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளின் அதிபர் ஆசிரியர்களுக்கான வருடாந்த கௌரவிப்பு நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) யாழ். இராமநாதன் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே வடக்கு ஆளுநர் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.
கடந்த கால யுத்தத்தில் பிரபாகரனோ மஹிந்த ராஜபக்ஷவோ வெற்றிபெறவில்லையென குறிப்பிட்ட வடக்கு ஆளுநர், வேதனையும், சோகமும், அழுகையும், துன்பமுமே மிஞ்சியதென இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், பழைய நிலைக்கு மீண்டும் திரும்ப வேண்டுமாயின் கல்வி கற்று அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டுமென்றும், இதற்கான பாரிய பங்கு ஆசிரியர்களுக்கு உண்டெனவும் வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே மேலும் தெரிவித்துள்ளார்.