Ad Widget

இளைஞர்களை அரசியல்வாதிகள் அடிதடிக்கு பயன்படுத்துகின்றனர்!

யாழில் உள்ள இளைஞர்களை அரசியல்வாதிகள் சிலர் அடிதடியில் ஈடுபடுவதற்கு பயன்படுத்தி வருவதாக தெரிவித்த யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஐ.வீரசிங்க பெற்றோர்களால் கவனிப்பின்றி வளர்க்கப்படும் பல இளைஞர்களை அரசியல்வாதிகள் தூண்டி விடுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு ஜே/123 கிராம சேவையாளர் பிரிவில் நேற்றைய தினம் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

யாழ்.பொலிஸ் நிலைய பிரிவிற்குள் தற்போது குற்றங்கள் கட்டுபபாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. கொக்குவில் பிரதேசத்தில் வாள் வெட்டு மற்றும் திருட்டில் ஈடுபட்ட வர்களையும் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தி தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளோம். குற்றங்களில் ஈடுபட்ட பலர் தற்போது சிறைகளில் உள்ளமையால் கொக்குவில் பகுதியில் இடம்பெற்று வந்த குற்றச்செயல்களும் வெகுவாக குறைவடைந்துள்ளது.

பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்துவிட்டு, அவர்கள் எங்கே செல்கின்றார்கள்? என்ன செய்கின்றார்கள்? என்பது தொடர்பில் கண்காணிப்பதில்லை. இதனால் அவர்கள் வழிதவறி செல்லும் நிலை அதிகமாகவே காணப்படுகின்றது.

இதனால் குற்ற சம்பவங்களில் விரும்பியோ விரும்பாமலோ அவர்கள் தொடர்புபடுகின்றனர். இவ்வாறான நிலையில் அரசியல் வாதிகளாலும் வன்முறையில் ஈடுபட வைப்பதற்காக குறித்த இளைஞர்கள் உணர்ச்சி வசப்பட வைக்கின்றனர். ஆகையால் தமது பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.

பெற்றோர்கள் தமது பிள்ளைகளை திருத்த முடியாவிட்டாலும் பொலிஸார் திருத்த வேண்டி ஏற்படும். பொலிஸார் பிள்ளைகளை கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை செய்து, பின்னர் நீதிமன்றில் முற்படுத்தி நான்கைந்து மாதங்கள் விசாரணை நடைபெற்று பின்னர் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

ஆகையால் இது தொடர்பில் பெற்றோர்களே கவனமாக இருக்க வேண்டும். தமது பிள்ளைகளின் எதிர்காலம் சீரழியாமல் இருப்பதற்கு தமது பிள்ளைகள் என்ன செய்கின்றனர்கள் என்பது தொடர்பில் தெரிந்திருக்க வேண்டும்.

தமது பிள்ளைகள் குற்ற செயல்களுடன் தொடர்புபட்டிருந்தால் அது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்துவதன் மூலம் எச்சரிக்கை செய்து பிள்ளைகளை திருத்த முடியும் என யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Related Posts