நல்லிணக்கம் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் சபையில் பொறுப்புகூறல் ஆகிய விடயங்களில் இலங்கை தற்போதும் மந்தகதியிலேயே செயற்பட்டுவருவதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஆட்சிமாற்றத்தில் பின்னர் இலங்கையில் ஊடகங்கள் மற்றும் சிவில் அமைப்புகளுக்கு பொதுவாக செயற்படும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன. எனினும் 2015 ஆம் ஆண்டு ஐ.நா சபையில் இலங்கை பொறுப்புகூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக வழங்கிய வாக்குறுதிகள் மந்தகதியிலேயே உள்ளது.
அதேபோன்று அரசால் தடுத்துவைக்கப்பட்டவர்களில் பெயர்கள் வெளிப்படுத்தப்படவில்லை. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக சர்வதேச சாசனத்திற்கமைய தயாரிக்கப்பட்ட சட்டம் இன்றும் திகதியிடப்படாமலேயே காணப்படுகின்றது.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் இதுவரையிலும் நியமிக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாது மனித உரிமை பாதுகாப்பு விடயம் தொடர்பாக இலங்கை வழங்கிய வாக்குறுதிகள் இதுவரையிலும் செயற்படுத்தப்படாமல் உள்ளது எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.