இலங்கை அரசாங்கத்தால் அமைக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறை குறித்து ஆராய்வதற்காகவும், இனிவரும் காலங்களில் பிரச்சனைகள் ஏற்படாதிருப்பதை உறுதிப்படுத்துவது தொடர்பான ஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரிப் அடுத்த வாரமளவில் சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரியவருகின்றது.
ஐநா மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளதால் இந்த அமர்வில் சிறீலங்கா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முன்னேற்றம் குறித்து ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் எதிர்வரும் 29ஆம் திகதி வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளார்.
அதற்கு முன்பாகவே ஐநாவின் சிறப்பு அறிக்கையாளரின் பயணம் அமையவுள்ளது. இவரது இப்பயணம் குறித்து சிறீலங்கா வெளிவிவகார அமைச்சு இதுவரை எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை.
அடுத்தவாரம் சிறீலங்கா வரும் சிறப்பு அறிக்கையாளர் அரசின் உயர் மட்டத் தலைவர்களைச் சந்திப்பதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் சந்திக்கவுள்ளார்.
அத்துடன் வடக்கிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள ஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் அங்கு பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். நல்லிணக்கம் தொடர்பான செயலணியுடனும் இவர் சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார் எனவும் தெரியவருகின்றது.