Ad Widget

இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக லண்டன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

மூன்றுநாள் அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டு லண்டன் வந்துள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக பிரிட்டிஷ் புலம்பெயர் தமிழர் அமைப்புகளால் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

protest_london_tamils

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்துக்கு முன்பாக வெஸ்ட்மின்ஸ்டர் அபே முன்றலில் பிரித்தானிய தமிழர் பேரவை ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

அதன் தொடர்ச்சியாக, காமன்வெல்த் தலைமையகமான மார்ல்பரோ ஹவுஸ் முன்றலில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும் தமிழ் இளையோர் அமைப்பும் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

இலங்கையில் ஆட்சி மாறினாலும் ஆட்சியாளர்கள் மாறவில்லை என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர். முன்னைய அரசாங்கத்தின் இருந்த அதே தலைவர்களே புதிய அரசாங்கத்திலும் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

இலங்கையில் இறுதியுத்தத்தின் போது நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்களுக்கு உரிய விசாரணை நடத்தவும் கைதுசெய்யப்பட்டு காணாமல்போனவர்கள் தொடர்பான விபரங்களை வெளியிடுவதற்கும் புதிய அரசாங்கமும் தவறிவருவதாக பிரித்தானிய தமிழர் பேரவையின் ஊடகத்துறைக்குப் பொறுப்பான சாம் சுதா தெரிவித்தார்.

புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னரும், இலங்கையில் தமிழர்கள் கைதுசெய்யப்படுவது நிறுத்தப்படவில்லை என்று பிபிசி தமிழோசையிடம் சாம் சுதா கூறினார்.

இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு நிரந்தரமான விடிவு வரும் வரை புலம்பெயர் நாடுகளில் தங்களின் போராட்டங்கள் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.

மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்துமாறு பல்வேறு வழிகளில் தங்களுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாகவும் பிரித்தானிய தமிழர் பேரவை கூறுகின்றது.

இலங்கை ஜனாதிபதியை சந்திக்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையை பிரித்தானிய தமிழர் பேரவை நிராகரித்து விட்டதாகவும் சாம் சுதா தெரிவித்தார்.

Related Posts