Ad Widget

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்!

இலங்கை கிரிக்கெட் அணிக்கு அரசியல் மற்றும் அதிகார மட்ட அழுத்தங்கள் இருப்பதனால் அணியில் இருக்கும் வீரர்களால் விளையாட்டில் சுதந்திரமாக செயற்பட முடியாத சூழல் இருப்பதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கிண்ணத்தை வென்ற இருபது வருடங்களை கொண்டாடும் வைகயில், “96ஐ கொண்டாடுவோம்” என்ற தலைப்பில் முன்னெடுக்கப்படவுள்ள நிகழ்வுகள் தொடர்பில் இன்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் 1996ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் அங்கம் வகித்த ரொசான் மஹனாமா, உபுல் சந்தன உட்பட பலர் கலந்துக்கொண்டனர். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியை எதிர்கொள்வதற்கு ஒன்றரை -இரண்டு வருடங்களுக்கு முன்னரே அணியை தயார் செய்யும் நடவடிக்கையில் ஈடுப்பட்டதாகவும், எந்தவொரு தலையீடும் இல்லாமல் வீரர்களை தெரிவு செய்வதற்கான வாய்ப்பு அன்றைய காலத்தில் இருந்தததாகவும் தெரிவித்தார்.

ஆனால் தற்போது தேவையற்ற தலையீடுகள் காரணமாக இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

வடக்கிலுள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு நல்ல பயிற்சி கொடுத்தால், இலங்கை கிரிக்கெட் அணியில் மேலும் சிறந்த வீரர்களை உருவாக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts