இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்திய நபர் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை!

2009 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது பாகிஸ்தான் லாகூர் நகரில் வைத்து தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரொருவர் பாகிஸ்தான் பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை நடவடிக்கைகளினைத் தொடர்ந்து இச்சந்தேக நபர் உட்பட மூன்று தலிபான் தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான ஹபீஸ் அலியாஸ் மொஹமட் என்பவரே இந்த நடவடிக்கையின் போது உயிரிழந்துள்ளார். இந்தத் தகவலை பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

குற்றப்புலனாய்வு ஏஜென்சி தலைவர் உமர் வேர்க் இது பற்றி தகவல் தெரிவிக்கையில், பாகிஸ்தான் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்தனர். அதன்போது மறைந்திருந்த தலிபான் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் போதே இம் மூவரும் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 03 ஆம் திகதி இலங்கை அணியினர் கடாபி மைதானத்திற்கு செல்லும் வழியில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஏழு இலங்கையணி வீரர்கள் உட்பட அணியின் பிரித்தானிய உதவி பயிற்றுவிப்பாளர் போல் பார்ப்ரேஸ் இத்தாக்குதலில் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தொடர் விசாரணையின் பின் இத் தாக்குதலோடு தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் ஆறு பேர் கைது செய்யப்பட்டமை அறிந்ததே.

Related Posts