Ad Widget

“இலங்கை ஒரு குற்றவாளி” : ஐ.நா.வில் ஆர்ப்பாட்டம்

யுத்தக் குற்றத்தில் ஈடுபட்ட இலங்கை ராணுவத்தை அந்நாட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காப்பற்ற முயல்வதாக தெரிவித்து, ஐ.நா. பொதுச்சபை கட்டத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஒரு குற்றவாளி எனும் தொனிப்பொருளில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று (புதன்கிழமை) இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெருமளவான புலம்பெயர் அமைப்புக்கள், இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு அரசாங்கம் எவ்வித நிதி விசாரணை பொறிமுறையையும் முன்னெடுக்கவில்லையென குற்றஞ்சாட்டினர்.

பாதிக்கப்பட்ட மக்கள் நீதியை எதிர்பார்த்து காத்திருக்கின்ற சந்தர்ப்பத்தில், அரசாங்கமோ குற்றவாளிகளை காப்பாற்றும் கைங்கரியத்திலேயே தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாக புலம்பெயர் அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

ஐ.நா. பொதுச் சபை அமர்வில் இலங்கை ஜனாதிபதி மைத்திரி உரையாற்றிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சிலர் எதிர்பார்ப்பதை போல தீர்வை உடன் பெற்றுத்தர முடியாதென்றும், நல்லிணக்கத்தை நோக்கிய பயணம் மெதுவாக இருந்தாலும் தீர்வு விடயத்தில் அரசாங்கம் உறுதியாக உள்ளதென்றும் ஜனாதிபதி மைத்திரி தனது உரையில் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts