Ad Widget

இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை தரம் 3 க்கு புதிதாக 1090 பேரை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு கோரியுள்ளது.

மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மூலம் 706 பேரையும், திறந்த போட்டிப் பரீட்சை மூலம் 384 பேரையும் ஆட்சேர்ப்பதற்காக இவ்விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கடந்த (07) வெள்ளிக்கிழமை வெளிவந்த வர்த்தமானியில் இவ்விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. விண்ணப்ப முடிவுத் திகதி மார்ச் மாதம் 6 ஆம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துமூலப் பரீட்சை, நேர்முகப் பரீட்சை, தகுதி மதிப்பீட்டு நேர்முகப் பரீட்சை மற்றும் செயன்முறைப் பரீட்சை அடிப்படையில் தெரிவுகள் இடம்பெறும்.

மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மூலம் தேசிய கல்வியியற் கல்லூரிகளில் நிலவும் 253 வெற்றிடங்களும், ஆசிரியர் நிலையங்களில் நிலவும் 317 வெற்றிடங்களும், ஆசிரியர் கலாசாலைகளில் நிலவும் 136 வெற்றிடங்களுமாக மொத்தம் 706 வெற்றிடங்கள் நிரப்பப்படவிருக்கின்றன.

இந்த 706 வெற்றிடங்களில் சிங்கள மொழி மூலத்தில் 340 வெற்றிடங்களும், தமிழ் மொழி மூலத்தில் 233 வெற்றிடங்களும், ஆங்கில மொழி மூலத்தில் 133 வெற்றிடங்களும் நிரப்பப்படவுள்ளன.

திறந்த போட்டிப் பரீட்சை மூலம் தேசிய கல்வியியற் கல்லூரிகளில் நிலவும் 138 வெற்றிடங்களும், ஆசிரியர் நிலையங்களில் நிலவும் 172 வெற்றிடங்களும், ஆசிரியர் கலாசாலைகளில் நிலவும் 74 வெற்றிடங்களுமாக மொத்தம் 384 வெற்றிடங்கள் நிரப்பப்படவிருக்கின்றன.

இந்த 384 வெற்றிடங்களில் சிங்கள மொழி மூலத்தில் 189 வெற்றிடங்களும், தமிழ் மொழி மூலத்தில் 122 வெற்றிடங்களும், ஆங்கில மொழி மூலத்தில் 73 வெற்றிடங்களும் அடங்கும்.

மேலதிக தகவல்களுக்கு, கடந்த (07) வெள்ளிக்கிழமை வெளிவந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts