Ad Widget

இலங்கை அரசாங்கம் சொல்வதொன்று செய்வதொன்று – த.தே.கூட்டமைப்பு

tnaஎப்போது எமக்கு விடிவு கிடைக்கின்றதோ, எப்போது எமக்கு உரிமை கிடைக்கின்றதோ, அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் பணியில் இருந்து ஒதுங்கும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக தமிழன் ஒருவரை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிறுத்துவாராக இருந்தால் த. தே. கூட்டமைப்பு எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிடாது.

நாங்கள் ஒரு அடிமையான இனம். அடிமைப்பட்டு பல இழப்புக்களை சந்தித்த இனம். முள்ளிவாய்க்காலில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் மக்களைப் பலிகொடுத்த இனம்.

அதற்கு முன்னால் பல மக்களைப் பலி கொடுத்த இனம். சமாதானத்திற்கு பின் அரசாங்கம் கூறுகின்ற சமாதானம் என்னவென்றால், கொங்கிறீற் வீதிகளையும், காப்பற்ற வீதிகளையும், குளங்களையும், பாலங்களையும் காட்டிவிட்டு அரசாங்கத்திற்கு நன்றிக் கடனாக இருக்க வேண்டும் என்பதே.

ஆனால் உலகத்திலே இன்று பேசப்படுகின்ற ஒரு பிரச்சினை இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையே. குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினையே.இது ஒரு சர்வதேச மயப்படுத்தப்பட்ட பிரச்சனையாக உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடகிழக்கு மக்களின் தலைமை என்பதை சர்வதேசம் அங்கீகரித்துவிட்டது. எமது பிரச்சினை சர்வதேசம் செல்லக்கூடாது. எமது நாட்டிலேயே பேசித்தீர்க்க வேண்டும் என்பதில் தந்தை செல்வா உறுதியாக இருந்தார்.

அதை உதாசீனம் செய்ததால் ஆயுதப் போராட்டம் வந்து இன்று சர்வதேசம் சென்றிருக்கின்றோம். இலங்கை அரசாங்கத்திடம் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

இலங்கை அரசாங்கம் சொல்வதொன்று. செய்வதொன்று. எங்களை ஏமாற்றி ஏமாற்றியே பழகிய அரசாங்கம் இலங்கை அரசாங்கம்.எந்த ஆட்சியாக இருந்தாலும் சரி தந்தை செல்வாவை ஏமாற்றியது.

பிரபாகரனை ஏமாற்றியது. இப்போது சம்பந்தன் ஐயாவை ஏமாற்றத் துடிக்கின்றது.ஆனால் இலங்கை அரசாங்கம் எம்மை ஏமாற்றியது தொடர்பாக 1947 ம் ஆண்டு தொடக்கம் சர்வதேசத்திற்கு தெரியப்படுத்தி இருக்கின்றோம்.

இப்போது மட்டக்களப்பில் பிரதேச வாதம். கிழக்கான் வடக்கான் என்பது போய் இப்போது மட்டக்களப்பான். ஒரு பிரதி அமைச்சர் கூறி இருந்தார் மட்டக்களப்பான் ஒருவன் தமிழ் தேசியக் கூட்டமைப்பற்கு தலைவராக இருந்தால் தான் பதவியில் இருந்து விலகிவிடுவாராம். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர் என்பதை அவர் புரிந்துகொள்ள வெண்டும்.

நான் திரும்பி அவரிடம் ஒன்று கேட்கின்றேன். வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழனை, அதுமலை நாட்டுத்தமிழனாக இருக்கலாம் அல்லது கொழும்புத் தமிழனாக இருக்கலாம் அல்லது வடகிழக்கு தமிழனாக இருக்கலாம். மகிந்த ராஜபக்ச அவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக தமிழன் ஒருவரை நிறுத்துவாராக இருந்தால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிடாது.

முடிந்தால் அந்த அமைச்சர் அதை செய்யட்டும்.அவர்கள் எல்லாம் சம உரிமை என்றுதானே கூறுகிறார்கள். இதைச் செய்தால் நாங்கள் இராஜினாமா செய்துவிட்டு அரசியலில் இருந்து ஒதுங்குவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts