Ad Widget

இலங்கை அகதிகள் தாக்கி 5 இந்திய பொலிசார் காயம்

தமிழகத்தின் மண்டபம் அகதி முகாமிற்குள் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில், இலங்கை அகதிகள் தாக்கியதில் எஸ்.ஐ., உள்ளிட்ட ஐந்து பொலிஸார் காயம் அடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

இராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் உள்ள முகாமில் இலங்கை அகதிகள் 1900 உள்ளனர். இம்முகாமிற்குள் நேற்று முன்தினம் தேவாலய திருவிழா நடந்தது.

அன்றிரவு தேவாலயம் முன்பு இன்னிசை கச்சேரி நடந்த போது, மது போதையில் இருந்த அகதி இளைஞர்கள் சிலர் கூச்சலிட்டு, நடனமாடினர். அப்போது பணியில் இருந்த போலீசார் அகதி இளைஞரை கட்டுபடுத்தினர். இதில் ஆத்திரமடைந்த அகதி இளைஞர்கள், பொலிசார் மீது கல் வீசியும், கம்பால் தாக்கினர்.

மேலும் மண்டபம் இன்ஸ்பெக்டரின் கார் கண்ணாடியை அடித்து நொறுக்கினர்.

இத்தாக்குதலில் மண்டபம் பொலிஸ் சிறப்பு எஸ்.ஐ., மாரிவேல் மண்டை உடைந்தது. மேலும் பொலிசார் போத்தல் ராஜ், பூபாலசந்திரன், ஊர்காவல் படை வீரர்கள் ராஜபாண்டி, முனியசாமி ஆகியோர் காயம் அடைந்தனர்.

இவர்கள் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இதுகுறித்து மண்டபம் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்கு பதிந்து இலங்கை அகதிகள் ரிச்சசர்டு ரெகான், ரூபிலெஸ், கேன்சன், சதுசன், மதுசன், விதுசன், ஆகிய ஆறு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர் என தினமலர் செய்திகள் தெரிவித்துள்ளன.

Related Posts