Ad Widget

இலங்கையை இன்று கடக்கவுள்ள சூறாவளி – மக்களுக்கு எச்சரிக்கை!

தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கமானது ஒரு சூறாவளியாக விருத்தியடைந்து பெரும்பாலும் இலங்கையைக் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் மழையுடனான வானிலையும் காற்று நிலைமையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த தாழமுக்கம் ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடைந்து நேற்று இரவு 11.30 மணிக்கு திருகோணமலைக்கு தென்கிழக்காக ஏறத்தாழ 500 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது.

இத் தொகுதியானது அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அது பெரும்பாலும் மேற்கு – வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மட்டக்களப்புக்கும் பருத்தித்துறைக்கும் இடையேயான இலங்கையின் கிழக்கு கரையை இன்று (புதன்கிழமை) மாலையில் அல்லது இரவில் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கிழக்கு, வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இடையிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சில இடங்களில் 200 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்சூடும் என்பதோடு, நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக் சூடுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல், மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 80-90 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Related Posts