Ad Widget

இலங்கையை அச்சுறுத்தும் கொரோனா: கடந்த 24 மணித்தியாலங்களில் 5 பேர் உயிரிழப்பு – 635 பேருக்கு தொற்று

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 5 மரணங்கள் பதிவாகியதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு 10 மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த 68 வயதான பெண் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

பிரேத பரிசோதனையில், அவருக்கு தொற்று அதிகரித்தமையால் ஏற்பட்ட மாரடைப்பால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், கொழும்பு 11 ஐச் சேர்ந்த 40 வயதான ஆண் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்தததையடுத்து, அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின்போதே கொரொனா தொற்று உறுதியாகியமை தெரியவந்ததாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் களனி பகுதியை சேர்ந்த 45 வயதான ஆண் ஒருவரும் கொரோனா தொற்றால் மரணமானார்.

கடந்த முதலாம் திகதி ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கொவிட் 19 தொற்றால் ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

அதேநேரம் பாணந்துறை பகுதியை சேர்ந்த 80 வயதான ஆண் ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்றால் மரணமடைந்தார்.

காவல்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்தார். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பிரதே பரிசோதனையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.

அத்துடன் இம்புல்கொட பகுதியைச் சேர்ந்த 63 வயதான பெண்ணொருவரும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார்.

இவர் உயிரிழந்தன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின்போதே அவருக்கு கொரோனா தொற்று இருந்தமை தெரியவந்துள்ளது.

லியூக்கேமியா நோய் தீவிரமடைந்து இந்த மரணம் சம்பவித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் 625 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 350 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் 5 ஆயிரத்து 121 நோயாளர்கள் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts