Ad Widget

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலையால் இருவர் உயிரிழப்பு – 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி இருவர் உயிரிழந்துள்தோடு, இருவர் காயமடைந்துள்ளனர்.

அதன்படி, கடும் மழை காரணமாக பதுளை மாவட்டத்தில் ஒருவரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மின்னல் தாக்கி ஒருவரும் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (திங்கட்கிழமை) காலை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி நாடளாவிய ரீதியில் 5 மாகாணங்களில், 7 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இரத்தினபுரி, நுவரெலியா, கண்டி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், பதுளை மற்றும் புத்தளம் மாவட்டங்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன.

குறித்த மாவட்டங்களில் வசிக்கும் ஆயிரத்து 344 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 373 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 55 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு, மூன்று வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 352 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அருகில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் சீரற்ற காலநிலை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts