இலங்கையில் சித்திரவதைகள் இடம்பெறுவதற்கான ஆதாரங்கள் உள்ளன என பிரிட்டனைத் தலைமையகமாகக் கொண்ட ‘சித்திரவதையிலிருந்து விடுதலை’ (freedom from torture) என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
சர்வதேச பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகளுக்கு இலங்கை அரசாங்கம் மதிப்பளிக்கிறதா என்பதை ஆராயும் ஐ.நா மனித உரிமை குழுவின் கூட்டத்தொடர் ஜெனீவாவில் இடம்பெற்றது.
இதில் பங்கேற்று உரையாற்றிய போதே அந்த அமைப்பின் தலைமை மருத்துவர் யூலியட்கோஹன் இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்:-
இலங்கையில் சித்திரவதைகள் இடம்பெறுவது குறித்து பெருமளவு ஆதாரங்கள் உள்ளன. எனினும் இவை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் குழுவுடன் தீவிரபேச்சுக்களில் ஈடுபட இலங்கை மறுப்பது கவலைக்குரிய விடயம்.
பாலியல் வன்முறைகள், சித்திரவதைகள். சிகரெட் சூட்டினால் காயம் ஏற்படுத்தப்படுதல் போன்ற நடைமுறைகள் இலங்கை முழுவதிலும் பின்பற்றப்படுகின்றன.
90 மருத்துவ ஆய்வறிக்கைகளை அடிப்படையாக வைத்தே இலங்கையில் சித்திரவதைகள் நிலவுகின்றன என்ற முடிவுக்கு வரமுடிந்துள்ளது.
அரசு சார்ந்த செயற்பாட்டாளர்களான இராணுவத்தினரே இதில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 73 வீதமானவர்கள் சிகரெட்டால் சுடப்பட்டு துன்புறுத்தப்பட்டுள்ளனர், 63 வீதமானவர்கள் பாலியல் வல்லுறவு மற்றும் சித்திரவதைகளுக்கு இலக்காகியுள்ளனர்.
இவை தவிர அனைவரும் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கையில் உளவியல் ரீதீயிலான சித்திரவதைகளும் இடம்பெற்றுள்ளமைக்கான ஆதாரங்கள் உள்ளன.
விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள அல்லது வைத்திருப்பதாக கருதப்பட்டவர்கள் இவ்வாறான சித்திரவதைக்கு உள்ளாவதற்கான அபாயம் நிலவுகின்றது. சிறியஅளவு தொடர்பு காணப்பட்டால் கூட அவர்கள் துன்புறுத்தப்படலாம். நாங்கள் வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்பும் தமிழர்கள் குறித்து கவலை கொண்டுள்ளோம், குறிப்பாக பிரிட்டனிலிருந்து இலங்கை செல்லும் தமிழர்கள் சித்திரவதைக்குள்ளாகின்றனர்.- என்றார்.