Ad Widget

இலங்கையில் காணாமல் போனவர்கள் மற்றும் சித்திரவதைகள் குறித்து ஐ.நா. நிபுணர்கள் கவலை!

இலங்கையில் போர் நடந்த காலத்துடன் ஒப்பிடுகையில், தற்போது சித்திரவதைகள் குறைந்துள்ளபோதிலும் அதற்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை என ஐ.நாவின் இரண்டு உயரதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அரசின் அழைப்பை ஏற்று ஒருவார காலம் பயணம் மேற்கொண்டிருந்த ஐ.நாவின் இரு உயரதிகாரிகள் தமது பயணத்தின் முடிவில் இக்கருத்தை வெளியிட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான வல்லுநர்கள் மொனிக்கா பின்டோ மற்றும் யுவான் இ மென்டிஸ் ஆகியோர் தமது பயணத்தின் முடிவில் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே இக்கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

இது கவலையளிக்கும் ஒரு விடயமாகவே இருக்கிறது எனக் கூறிய யுவான் இ மென்டிஸ், சித்திரவதைகளை முழுமையாக இல்லாதொழிக்க அரசு நடடிவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரினார்.

போர் நடந்த காலப்பகுதியில் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் செய்யப்பட்டுள்ளனர் எனவும், அது தொடர்பில் நாடு தழுவிய விசாரணை தேவைப்படுகிறது எனவும் அவர் கூறினார்.

நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையடுத்து நாடு ஜனாநயகத்தின் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றபோதிலும், இப்படியான விஷயங்கள் தடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நீதித்துறை சிறந்த கட்டமைப்புடன் இருக்கின்றபோதிலும், அதனை மேலும் வலுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய நீதித்துறைக்கான ஐ.நா.வின். வல்லுநர் மொனிக்கா பின்டோ தெரிவித்தார்.

கைது நடவடிக்கைகளின்போது காவல்துறையினர் சட்டத்தை முறையாக பின்பற்ற வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார். தமது விஜயம் தொடர்பில் அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாக கூறிய மொனிக்கா பின்டோ, அந்த அறிக்கை விரையில் இலங்கை அரசிடம் கையளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Related Posts