Ad Widget

இலங்கையின் சுதந்திர தினம் தமிழ் மக்களுக்கு சுதந்திரமற்ற தினம் – சிறிதரன்

இலங்கையின் சுதந்திர தினமானது தமிழ் மக்களுக்கு சுதந்திரமற்ற தினமாகவே பார்க்கப்படுகின்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி கந்தசாமி கோவிக்கு அருகில் காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் சங்கத்தினால் நேற்று எதிர்ப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

காலை 09.00 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போதே சிறிதரன் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டார்.

இலங்கைத் தீவில் சமாதானம் இருப்பது போன்று தென்பட்டாலும் மனத்தாலும் மக்களின் செயற்பாடுகளாலும் இரண்டுபட்டே காணப்படுகின்றது என்றும் அவர் கூறினார்.

இதேவேளை இலங்கையின் 68வது சுதந்திர தினமான இன்று காணமால் போனவர்களின் குடும்ப உறவுகள் பல்வேறு பகுதிகளிலும் கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

கறுப்பு நிற துணிகளால் தமது வாய்களை கட்டியபடி வவுனியா நகர சபைக்கு முன்னாள் பெருந்திரளான மக்கள் ஒன்று கூடி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

போரின் போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட தமது உறவுகள் எங்கே என்று எழுதப்பட்ட பதாகைகளை இவர்கள் ஏந்தியிருந்தனர்.

அத்துடன் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்கவும் இவர்கள் வலியுறுத்தி இருந்தனர்.

இதேவேளை மட்டக்களப்பிலும் காணமால் போன குடும்ப உறவுகள் ஒன்றிணைந்து கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

இக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் தாயக மக்கள் மறுமலர்ச்சி சங்கம் மற்றும் காந்தி சேவா சங்கத்தின் தலைவர் லயன் ஏ. செல்வேந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உருப்பினர் பா.அரியநேந்திரன், காணாமல் போனவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Related Posts