Ad Widget

இலங்கையர்களின் இந்தியாவுக்கான ஊடுருவலுக்கு தடுப்பு

இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குள் ஊடுருவுபவர்களைத் தடுப்பதற்காக, இந்தியப் பாதுகாப்புத் தரப்பினர், பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இராமேஸ்வரம், தனுஷ்கோடி, அரிச்சல்முனையில் இருந்து இலங்கை தலைமன்னார் வரையிலான கடற்பகுதியில், ஏராளமான மணல் திட்டுகள் உள்ளன.

இவற்றில் ஐந்து மணல் திட்டுகள், இந்திய கடல் எல்லைக்குள் அமைந்துள்ளன. ஏனையவை, இலங்கை கடல் எல்லைக்குள் அமைந்துள்ளன. இலங்கையில் இருந்து சட்டவிரோதமாகப் படகுகளில் செல்பவர்கள், இந்திய எல்லைக்குள் உள்ள மணல் திட்டுகளில் இறக்கி விடப்படுகின்றனர்.

இவர்களை, இராமேஸ்வரத்தைச் சேர்ந்த சில மீனவர்கள், தங்கள் படகுகளில் அழைத்துச் செல்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, மணல் திட்டுகள் வழியாக, இந்தியாவுக்குள் இலங்கையர்கள் ஊடுருவுவதைம் தடுக்கும் விதமாக, இந்தியக் கடற்படையினரால் ரோந்து நடவடிக்கைகள் தீவிரப்படுத்தி உள்ளன.

அந்த வகையில், மன்னார் வளைகுடா, தனுஷ்கோடி அரிச்சல்முனை, இந்திய எல்லை மணல்திட்டு ஆகிய பகுதிகளில், இந்தியக் கடற்படையினர், தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று, இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

Related Posts