Ad Widget

இலங்கைத் தமிழர் விடயத்திலும் அக்கறை காட்டவும், ஜெயாவுக்கு அனந்தி கடிதம்

ananthy-sasikaran-tnaமரண தண்டனைக் கைதிகளில் காட்டிய மனிதநேயமும் நியாய உணர்வையும் இலங்கைத் தமிழ் அகதிகள் விடயத்திலும் காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை எம்மக்களுக்கு ஏற்பட்டுள்ளது’ என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு பின் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்ட மூன்று தமிழ் இளைஞர்களது முழுமையான விடுதலை தொடர்பாக தாங்களும் தங்கள் அரசும் மனோ தர்மத்தின்படியும் மனிதநேயத்தின் அடிப்படையிலும் எடுத்த முடிவு உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நடவடிக்கை சரித்திரத்தில் பதியப்படும் என்பது உண்மை. இந்தவகையில் தாங்கள் தமிழ்பேசும் நல்லுலகத்தினரால் என்றென்றும் நன்றியுடன் நினைக்கப்பட வேண்டியவரே.

இதேசமயம் தமிழகத்தில் சில தசாப்த காலமாக அகதி முகாம்களில் பல்வேறு துன்ப துயரங்களை சுமந்தபடி பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்தபடி அகதிகள் என நிரந்தரமாக அடையாளப்படுத்தப்பட்டவர்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்கள் பற்றி தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருவதன் மூலம் அவர்கள் வாழ்விலும் இயல்பு நிலமையினை தோற்றுவிக்க வேண்டும் என நாம் விரும்புகிறோம்.

உண்மையில் அவர்கள் அகதிகளோ, அநாதைகளோ அல்ல. சிங்கள அரசின் அளப்பெரிய கொடுமைகளுக்கு முகங்கொடுக்க முடியாது உயிர்ப் பாதுகாப்பிற்கென மட்டுமே புலம்பெயர்ந்து வந்தவர்கள்.

கடந்த நான்கு தசாப்தங்களில் அவர்கள் வசதிகளற்ற அகதி முகாம்களிலும் சிறப்பு முகாம் என அழைக்கப்படும் தடுப்பு முகாம்களிலும் படும் இன்னல்கள் ஒன்றும் இரகசியமானதல்ல. அவர்களும் அவர்களது உறவுகளும் சொந்த மண்ணிற்கு திரும்பி இயல்பு வாழ்க்கை வாழும் எதிர்காலம் குறித்த நம்பிக்கையற்ற நம்பிக்கைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அங்குள்ளவர்களின் துன்ப துயரங்களை நேரில் சென்று பார்த்தாலே புரிந்துகொள்ள முடியும்.

இந்த நிலையில் தங்களால் சொந்த மண்ணிற்கு திரும்பும் வரையிலான காலம் கனியும்வரை அவர்கள் குறைந்தபட்சம் தத்தம் மனித உணர்வுகளை இழக்காமல் வாழ்வதற்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது தமிழக அரசினதும் முதல்வராகிய உங்களதும் மனிதநேய கடமையாகும் என எண்ணுகிறோம்.

மரண தண்டனைக் கைதிகளில் காட்டிய மனிதநேயமும் நியாய உணர்வும் இலங்கைத் தமிழ் அகதிகள் விடயத்திலும் அக்கறையுடன் காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை எம்மக்களுக்கு ஏற்பட்டுள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts