Ad Widget

இலங்கைத் தமிழரசுக் கட்சியில் வகித்த பதவிகளில் இருந்து விமலேஸ்வரி நீக்கம்.! – சுமந்திரன், சிறீதரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவரும் கடிதம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் கட்சியின் உறுப்பினர் என்னும் தகுதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு யாழ் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் என்னும் பதவியில் இருந்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.

கடந்த ஜுன் 28ம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பொன்றின் போது கட்சிக்கும், கட்சி உறுப்பினர்கள் சிலருக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமான கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

இது கட்சியின் ஒழுக்கக் கோவை அ(1), ஆ(5) அகிய பிரிவுகளின் அடிப்படையில் அவருக்கான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவரை கட்சியின் அனைத்து பதவிகள் பொறுப்புகளில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவருக்கு 2020.07.01 திகதியிட்டு கடிதம் பதவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டள்ளதுடன், அக்கடிதம் உடன் அவரைச் சேரும் விதமாக வாட்சப் மூலமும் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கி.துரைராசசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கத்துக்கு விமலேஸ்வரி சிறிஸ்காந்தரூபன் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

யாழ்ப்பாணம்
30.06.2020

கி.துரைராஜசிங்கம்
பொதுச் செயலாளர்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி

எனது விசுவாசத்திற்குரிய தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஐயா, செயலாளர் துரைராஜசிங்கம் ஐயா ஆகிய இருவருக்கும் நான் பின்வரும் விடயங்களை முன்வைக்க விரும்புகிறேன்.

என்மீது நீங்கள் மேற்கொள்ள இருக்கின்ற விசாரணைக்கும், நடவடிக்கைக்கும் நான் எனது முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவேன் என்பதுடன், நீங்கள் எடுக்கும் முடிவினை ஏற்றுக்கொள்வதற்கும் தயாராக உள்ளேன்.

அதற்கு முன்னராக,  எமது கட்சின் சிலர் மீது உடனடி நடவடிக்கை வேண்டும் என் கின்ற கோரிக்கையினையும் தங்கள் முன் தாழ்மையுடன் சமர்ப்பிக்க விரும்புகின்றேன்.

என்னால் இதன்கீழ் பரிந்துரைக்கப்படும் விடயங்களிற்கு தங்கள் சட்ட நடவடிக்கைகளையும் ஒழுக்காற்று விசாரணைகளையும் செய்ய வேண்டும் என்பதனை நான் வெளிப்படையாகவே கேட்டுக் கொள்கின்றேன்.

  1. சுன்னாகத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம.ஏ.சுமந்திரனால், சுமந்திரனின் அறிவுறுத்தலின் படி மாணிப்பாய் தொகுதி தமிழரசுக் கட்சித் தலைவர் பிரகாஸ் என்பவரால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் தமிழ் மக்களின் விசுவாசத்திற்குரிய தமிழரசு கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவை தரம் தாழ்த்தி ஊடகவியலாளர் வித்தியாதரனைக் கொண்டு விமர்சிக்க வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சுமந்திரனையும் கூட்டத்தில் இருந்து விமர்சிக்கும்  போது கைகொட்டி ஆரவாரம் செய்த சயந்தன், கரிகரன், தயாளன் ஆகியோரையும் விசாரணைக்கு உட்படுத்தி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நானும் தமிழ்த் தேசியவாதிகளும் கட்சி உறுப்பினர்களும் தங்களிடம் கோரிக்கை விடுத்திருந்தோம்.

இது தொடர்பான கருத்தை செல்வா நினைவுத்தூபிக்கு முன்னாள் நடந்த நேர்காணலிலும் நான் பல ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தேன்.

  1. சுமந்திரனால் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட நேர்காணலில் வேதனையடைந்த தமிழ் மக்கள் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களில் இருந்தும் சுமந்திரனை தமிழரசு கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று தங்களுக்கு கொடுத்த அழுத்தத்தை நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். அதற்கு தமிழரசுக் கட்சியின் மத்திய குழு நடவடிக்கை எடுக்கும் என தலைவர் மாவை சேனாதிராஜா வழங்கிய உறுதி மொழி இன்று வரை நடைமுறைப்படுத்தப் படவில்லை அதனை உடன் நடைமுறைப்படுத்துங்கள்.
  2. விடுதலைப் புலிகள்தான் ஏகப்பிரதிநிதிகள் என்று மக்கள் கொடுத்த ஆணையினால்தான் 22 பேர் நாடாளுமன்றம் சென்றார்கள் என்பதனை யாரும் மறுக்க முடியாது. இன்று வரை சர்வதேச அங்கீகாரத்துடன் உள்ள மிகப் பெரும் மக்கள் ஆணையை கேள்விக்குட்படுத்தி 75 கள்ள வாக்குகளை நான் போட்டுள்ளேன் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கூறியது தமிழரசுக் கட்சிக்கு அவமானம் என்பதுடன் பொது வெளியில் எமது மக்கள் அணைக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கள்ள வாக்குகள் போட்டு தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் 22 பேர் நாடாளுமன்றம் சென்றார்களா? என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வது? விடுதலைப் போருக்கு பின் எங்கள் பிரசன்னங்கள் கள்ள வாக்குகள்தான் கொண்டுவரப்பட்டதா?

இதற்கான விசாரணையும் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.  தனது நேர்காணலால் தமிழ் இனத்துக்கும், தமிழ்த் தேசியத்திற்கும், தமிழரசுக் கட்சிக்கும் மிகுந்த தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ள சிறீதரனுக்கு எதிராக கட்சி எடுக்கும் ஒழுக்காற்று நடவடிக்கை, நிச்சயம் ஒரு முன்மாதிரியான நடவடிக்கையாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

  1. தமிழ்த் தேசியத்திற்கும் விடுதலைக்கும் எதிரான பெண் வேட்பாளர் அம்பிகா சற்குணநாதனை நானும் மிதிலைச் செல்வியும் சரோஜா சிவச்சந்திரனும் பெண்கள் அமைப்புக்களூடாக செய்த போராட்டங்களினால் வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கிய போதும் தேசியப் பட்டியலில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவை முதல் இடத்தில் இருந்து தவிர்த்து வேட்பாளர் கையொப்பமிடும் போது அம்பிகாவை அழைத்து இருந்ததையும் எல்லோரும் அறிவார்கள்.

ஆனால் எம் இனத்திற்கு எதிரான ஒருவரை வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஒருவரை தேசியப் பட்டியலின் முதலாவதாக இன்று பெயரிடப்பட்டுள்ள அம்பிகா சற்குணராஜா 2018ம் ஆண்டு ஜெனிவா வரை சென்று எம் இனத்திற்கு எதிராக செயற்பட்டதை மனித உரிமைகள் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில் இவரது பெயர் உள்வாங்கப்பட்டமைக்கு விசாரணையும் சட்ட நடவடிக்கையும் உடனடியாகத் தேவை என்பதையும் தங்கள் முன் கோரி நிற்கின்றேன்.

  1. மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்பாளராக கொண்டு வரப்பட்ட சாணக்கியனும் தமிழருக்கு விரோதமாக 2010ம் அண்டு தேர்தலில் இலங்கை அரச சார்பு சுயேச்சைக்குழுவில் செயற்பட்டவர் என்பதனை உலகமே அறியும்.
  2. நளினி இரட்ணராஜாவின் வேட்பாளருக்கான விண்ணப்பம் மட்டக்களப்பு வேட்பாளர் தெரிவில் இருக்கவில்லை. ஆனால் கொழும்பில் நடைபெற்ற வேட்பாளர் தெரிவில் இந்த விண்ணப்பம் மின்னஞ்சல் ஊடாக கொண்டு வரப்பட்டது என சுமந்திரனின் பிழையான வழிநடத்தல் ஊடாக இவரின் பெயர் உள் நுழைக்கப் பட்டது. இந்த முறையற்ற விண்ணப்பத்திற்கு யார் உடந்தையாக இருந்தார்கள்? விசாரணை செய்ய வேண்டிய தகுதி வாய்ந்த இடத்தில் இருந்த எமது கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் இந்த விடயத்தில் நேரடியாக தொடர்பு பட்டிருப்பதால் அவர் மீதும் உடனடி நடவடிக்கை வேண்டும்.
  3. சுமந்திரனால் நடத்தப்பட்ட சகல நேர்காணல்கள், கூட்டங்களிலும் நானும் சம்பந்தர் ஐயாவும் தான் வேறு மொழி தெரிந்தவர்கள்.

சட்டத்தரணிகள் என்பதை பல தடைவைகள் சொல்வதுடன் எந்த நேர்காணலிலும் எங்கள் தமிழரசுக் கட்சி தலைவரை முன்னிறுத்தியது கிடையாது. இது தலைமையை மல்லினப்படுத்தும் செயலாகும் எதிர் காலத்தில் இவற்றிற்கு முடிவு வைக்கப் பட வேண்டும்.

தமிழரசுக் கட்சியில் இருந்து கொண்டே தமிழரசுக் கட்சித் தலைவரை அவமதிப்பதை எப்படி விசுவாசிகளால் பார்த்துக் கொண்டிருக்க முடியும்?

அதனால் என்றும் தலைமைக்குக் கட்டுப்படும் நாம் உங்களிடம் வைக்கும் மிக முக்கிய கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை எடுத்து தமிழரசுக் கட்சியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மிக பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி
விமலேஸ்வரி சிறிஸ்காந்தரூபன்
மகளீர் அணிச் செயலாளர்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி

Related Posts