Ad Widget

இரு வேறு விபத்துக்களில் இருவர் பலி!

accidentகிணற்றில் விழுந்து வயோதிப பெண் மரணம்
யாழ்ப்பாணம் மாதகல் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த வயோதிபப் பெண்ணொருவர் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இரத்தினம் வள்ளியம்மை (வயது 70) என்ற வயோதிப பெண்மணியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

பிறவியிலேயே கண் பார்வையற்ற இவர், நேற்று அதிகாலை கிணற்றடிக்குச் செல்லும் போது கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.

வீட்டில் உள்ளவர்கள் காலை 6.30 மணியளவில் இவரைத் தேடிப் பார்த்த போது இவர் கிணற்றுக்குள் இறந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக இளவாலைப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார் சடலத்தை மீட்டெடுத்தனர்.

மரண விசாரணையை அடுத்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

வீதி விபத்தில் குடும்பஸ்தர் பலி

மோட்டார் சைக்கிளில் வந்தவர் வீதியில் குவிக்கப்பட்டிருந்த கிரவல் கற்கள் மீது தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் சாவகச்சேரி சரசாலை மேற்கைச் சேர்ந்த செல்லையா கந்தசாமி (வயது 50) என்ற ஆறு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது,

சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மோட்டர் சைக்கிளில் பொருட்கள் வாங்கிக் கொண்டு மதுபோதையுடன் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

வீதித் திருத்தத்திற்காக போடப்பட்டிருந்த கற்குவியலுக்குள் தவறி விழுந்து காயமடைந்தார்.

படுகாயமடைந்த இவரை வீதியில் நின்றவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் நேற்று மதியம் 2 மணிக்கு அவர் சிகிச்சை பயனளிக்காது உயிரிழந்தார்.

மரண விசாரணைகளை அடுத்து சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Posts