மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் இன்று காலை மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ‘தடம் மாறுகிறதா தமிழ் தேசியம்’ என்னும் கருத்தாய்வு இன்று மன்னார் ஞானோதயம் மண்டபத்தில் இடம்பெற்று வருகின்றது.
இதில் பங்கேற்பதற்காக இன்று மன்னாருக்கு விஜயம் செய்துள்ள எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சென்று முன்னாள் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை மற்றும் தற்போதைய அப்போஸ்தலிக்க பரிபாலகர் கிங்சிலி சுவாம்பிள்ளை அடிகளாரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது திருகோணமலை மறை மாவட்ட ஆயர் றோயல் இம்மானுவேல், ஆயரின் செயலாளர் அருட்தந்தை முரளிதரன், மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன், இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா ஆகியோரும் பங்கேற்றனர்.