Ad Widget

இராணுவம் வெளியேறாவிடின் தீக்குளிப்போம்; புதுக்குடியிருப்பு மக்கள்

இராணுவத்தினர் தமது காணிகளை விடுவிக்காவிட்டால் தீக்குளிக்கப் போவதாக முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மக்கள் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்களின் காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேறுமாறு கோரியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்த போராட்டம் நேற்று காலை முதல் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னாள் இடம்பெற்று வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 49 பொதுமக்களுக்கு சொந்தமான 19 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு தெரிவித்தே, பொதுமக்கள் இன்றுமுதல் தொடர் போராட்டத்தில் ஈடுபடுபட்டுள்ளனர்.

60 வருடத்திற்கு மேலாக தாம் குறித்த காணிகளில் வசித்து வந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்றதாகவும், 2011 ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோது, தமது காணிகளை இராணுவத்தினர், கையகப்படுத்தியிருந்த நிலையில் பல போராட்டங்களை முன்னெடுத்த போதும் இதுவரை தீர்வு முன்வைக்கப்படவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.

இறுதி யுத்தத்திற்கு முகம்கொடுத்து பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வரும் நிலையில், தற்போது தமது காணிகளுக்காக போராட வேண்டிய நிலையில் உள்ளதாக குறிப்பிடும் அப்பகுதி மக்கள், தமிழர்களுக்கு எப்போது விடிவு வரும் என்றும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

தொடர்ச்சியாக தாம் 2009 ஆம் ஆண்டு தை மாத்தில் இருந்து வீடின்றி அகதிகளாக திரிவதாக தெரிவிக்கும் மக்கள், தமது வீடுகளில் இராணுவம் வசித்து வருதாகவும் கவலை வெளியிட்டனர்.

Related Posts