Ad Widget

இராணுவத்தைக் குறைக்காது மீள்குடியமர்வு சாத்தியமாகாது – த.தே.கூ

இராணுவக் குறைப்பில் புதிய அரசு அக்கறை செலுத்தாத வரையில், தமிழ் மக்களின் மீள்குடியமர்வு முழுமையாகச் சாத்தியமில்லை என்று அமெரிக்க செனட் உறுப்பினர்களிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

suresh

இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்க செனட் உறுப்பினர்கள், யாழ்ப்பாணத்திற்கு நேற்றுமுன் தினம் வந்திருந்தனர். வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுடன் அவர்கள் சந்திப்பை மேற்கொண்டிருந்தனர்.

பின்னர் நேற்று கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசினர்.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா.சம்பந்தன், மாவை. சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இந்தச் சந்திப்புத் தொடர்பில் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன், தெரிவிக்கையில், “கடந்த கால அரசின் காலத்தில் காணப்பட்ட பிரச்சினைகள் தொடர்பிலும், தற்போதைய அரசின் காலத்தில் காணப்படும் நிலைமை தொடர்பிலும் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் கேட்டறிந்னர்.

மீள்குடியமர்வு விடயம் தொடர்பில் அதிகமாகப் பேசப்பட்டது.” என்று அவர் குறிப்பிட்டார்.

“கடந்த அரசின் காலத்தில் உயர் பாதுகாப்பு வலயங்கள் அமைக்கப்பட்டு தமிழ் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டன. தற்போதைய அரசு அவற்றை விடுவதாகத் தெரிவிக்கின்ற போதும், நடைமுறையில் அதன் வேகம் குறைவாகவே இருக்கின்றது.

இலங்கையின் தற்போதைய இராணுவம், அரசு சொல்வதை முழுவதுமாக நடைமுறைப்படுத்தும் என்றும் எதிர்பார்க்க முடியாது. கடந்த அரசின் காலத்தில் இராணுவத்துக்கு அளவுக்கு அதிக அதிகாரங்களும் தேவையற்ற விடயங்களில் தலையீடு செய்யும் சுதந்திரமும் வழங்கப்பட்டதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

புதிய அரசு வடக்கிலிருந்து படைக்குறைப்பு மேற்கொள்வது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் இராணுவத்தினர் தங்கியிருப்பதற்கு காணி தேவை. அதனால் அவர்கள் மக்கள் முழுமையாக மீளக்குடியமர்வதற்கு அனுமதிக்க மாட்டார்கள்.

எனவே முதலில் வடக்கிலிருந்து இராணுவத்தினரைக் குறைப்புச் செய்ய வேண்டும்.” என்பதைச் சுட்டிக்காட்டினோம் என்றும் அவர் தெரிவித்தார்.

“இனப் பிரச்சினைக்கு கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட தீர்வுத்திட்டங்கள் தொடர்பில், அமெரிக்க செனட் உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. இதன் போது அவர்கள், உடனடிப் பிரச்சினையான மீள்குடியமர்வு, காணாமற் போனோர் விவகாரம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை ஆகியவற்றுக் தீர்வு காணாமல், இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமா என்று கேள்வியயழுப்பினர்.

உடனடிப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் அதேவேளை, இனப் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட வேண்டும். அதனையே வலியுறுத்துகின்றோம் என்று நாம் குறிப்பிட்டோம்.

இதன் போது அமெரிக்க செனட் உறுப்பினர்கள், புதிய அரசு பதவியேற்று இரண்டு மாத காலம்தான் முடிந்துள்ளது. எனவே கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டனர்.” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts