Ad Widget

இராணுவத்தினரின் துப்பாக்கியை இருவர் பறித்து சென்றமையால் முல்லைத்தீவில் பதற்றம்!!!

முல்லைத்தீவு ஆண்டான் குளபகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரின் துப்பாக்கியை இருவர் பறித்து சென்றமையால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து அந்தப்பகுதியில் பெருமளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு குமுழமுனை ஆண்டான் குள வீதியில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) இரவு இராணுவத்தினர் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட போது அவர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட இருவரே துப்பாக்கியை பறித்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியால் வந்த இருவரை இராணுவத்தினர் மறித்து சோதனை செய்தபோது, அதற்கு குறித்த இருவரும் எதிர்ப்பு தெரிவித்து இராணுவத்தினருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் திடீரென அங்கிருந்த இராணுவ சிப்பாய் ஒருவரின் ஏ.கே. 47 ரக துப்பாக்கியை பறித்துக்கொண்டு காட்டு பாதை ஊடாக தப்பியோடியுள்ளார்கள்.

அதனையடுத்து அப்பகுதியில் பெருமளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு அக்காட்டுப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல்கள் நடாத்தப்பட்டது.

பின்னர் மறுநாள் இராணுவத்தினரால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டு பொலிஸ் விஷேட பிரிவினர் இணைந்து அப்பகுதிகளில் தேடுதல் நடத்தினார்கள்.

அந்நிலையில் துப்பாக்கியை பறித்து சென்றவர்களைத் தெரிந்தவர்கள் என மூவரைப் பொலிஸார் கைது செய்து அவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அதன் போது குறித்த மூவரில் ஒருவர் துப்பாக்கியை பறித்து சென்றவர்கள் என அடையாளம் காணப்பட்ட ஒருவருடன் தொலைபேசியில் உரையாடி துப்பாக்கி எங்கே மறைத்து வைக்கப்பட்டு உள்ளது என வினாவியபோது , துப்பாக்கி முறிப்பு வீதியில் உள்ள ஒரு பாலத்தின் கீழ் உள்ளது என கூறினர். அதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற இராணுவத்தினர் துப்பாக்கியை மீட்டு சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், துப்பாக்கியை பறித்து சென்றவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Posts