Ad Widget

இராணுவத்தினரால் மக்களின் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன – சுரேஸ் எம்.பி

வடபகுதி மக்களின் வாழ்வாதாரம் இங்கு நிலைகொண்டுள்ள இராணுவத்தினரால் பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள இராணுவத்தினர் மக்களின் நிலங்களை பிடித்து வைத்திருப்பதால் மக்கள் தொழில் செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

suresh

5 இலட்சம் ரூபாய் நிதியில் புனரமைப்பு செய்யப்பட்ட சாவகச்சேரி பிரதேச சபையின் மிருசுவில் உப பணிமனை மற்றும் ஆயுள்வேத சிகிச்சை நிலையம் ஆகியவற்றின் திறப்பு விழா சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் எஸ்.துரைராசா தலைமையில் இன்று திங்கட்கிழமை (29) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கட்டிடங்களை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

வடக்கிலிருந்து இராணுவத்தினர் வெளியேறவேண்டும். இராணுவத்தினர் தங்கள் இடங்களை மாற்றுகின்றனரே தவிர வெளியேறவில்லை.

வடமாகாணத்திலுள்ள சில உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் குழப்பங்களில் ஈடுபடுகின்றனர். அவ்வாறு இல்லாமல் ஒற்றுமையாக இருந்து மக்களுக்கான சேவைகளை முன்னெடுக்க வேண்டும்.

உள்ளுராட்சி மன்றங்களில் குழப்பங்கள் மேற்கொள்பவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும். உள்ளுராட்சி மன்றங்களிற்கு இன்னும் 8 மாதங்களே பதவிக்காலம் இருக்கின்றதுடன், அந்த காலத்தில் மக்களுக்கான சேவைகளை சிறப்பாக செய்யவேண்டும் எனவும் அவர் மேலும் கூறினார்.

இராணுவத்தினரின் முகாமாக 10 வருடங்களாக இருந்த மேற்படி இரண்டு கட்டிடங்களும் கடந்த மே மாதமளவில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டதையடுத்து, பிரதேச சபையின் 5 இலட்சம் ரூபாய் நிதியில் புனரமைப்பு செய்யப்பட்டு,இன்று திங்கட்கிழமை (29) திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts