Ad Widget

இரத்தக் காயங்களுடன் மகனைக் கட்டிவைத்திருந்தது இராணுவம்!

சேட் கிழிக்கப்பட்டு இரத்தக் காயங்களுடன் கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் 19 வயதான எனது மகனை இராணுவத்தினர் பிடித்துவைத்திருந்தனர். விட்டுவிடுங்கள் என்று கேட்கப்போன கோயில் பூசாரியாரையும் பூட்ஸ் காலால் தாக்கி ஓட ஓட விரட்டியடித்தனர் இராணுவத்தினர்.”

– இவ்வாறு ஜனாதிபதி ஆணைக்குழு முன் கதறியழுதவாறு சாட்சியம் அளித்தனர் தாயும் தந்தையும்.

பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற காணாமல்போனவர்களைக் கண்டறியும் ஜனாதிபதியின் ஆணைக்குழு விசாரணை அமர்வில் அவர்கள் சாட்சியமளிக்கும்போது மேலும் தெரிவித்ததாவது:

“பருத்தித்துறை, புலோலியில் உள்ள எங்களது வீட்டிலிருந்து கடந்த 2007ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு ரியூசனுக்காக வெளிக்கிட்டுச் செல்லும்போதே எமது மகன் இராணுவத்தினரால் கடத்தப்பட்டார்.

அவர் ரியூசனுக்கு வரணி வீதியால்தான் செல்வார். அப்போது அந்த வீதியில் உள்ள இந்திரம்மன் கோவிலடியில் நின்ற இராணுவத்தினர் எனது மகனையும் இன்னும் மூன்று இளைஞர்களையும் பிடித்துவைத்து விசாரித்தார்கள் என்று நேரில் கண்டவர்கள் கூறினார்கள். சிறிதுநேரத்தில் அங்கேயே எனது மகன் இராணுவத்தால் தாக்கப்பட்டு அவனுடைய சேட் கிழிக்கப்பட்டு இரத்தக் காயங்களுடன் கைகள் இரண்டும் பின்னால் கட்டபட்டபடி நின்றுள்ளான்.

அப்போது அந்தக் கோவிலில் பூசாரியாக இருந்த வெங்கடாச்சலம் என்னும் பெயருடைய ஐயா ஒருவர் எங்களுடன் பழக்கமானவர். அவருக்கு எனது மகனை நன்றாகத் தெரியும். இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த அவர் இராணுவத்தினருக்கு அருகில் சென்று ஏன் இப்படி செய்கிறீர்கள்? அவன் பாடசாலை மாணவன். அவனை விடுங்கள் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து குறித்த பூசாரியை இராணுவத்தினர் தள்ளி விழுத்தி தங்களுடைய பூட்ஸ் கால்களால் மிதித்துக்காயப்படுத்தியுள்ளார்கள். பின்னர் அவரை ஓட ஓட விரட்டி அடித்தார்களாம் என்றும், மகன் இந்த நிலையில்தான் உள்ளார் என்றும் அந்தப் பூசாரி எனது மனைவியிடம் கூறினார். இராணுவத்தால் தாக்கப்பட்டதை பூசாரியும், ஒரு புகைப்படக் கடையில் வேலைசெய்யும் ஒருவரும் கண்டு எமக்கு அறிவித்தனர்.

இவற்றைக் கேட்ட நாம் மந்திகையில் உள்ள இராணுவ முகாமுக்குச் சென்று மகனைப் பற்றி விசாரித்தோம். அங்கிருந்த இராணுவத்தினர் தங்களிடம் இல்லை எனக் கூறினார்கள். ஆனால், இராணுவ முகாமில் எனது மகனுடைய சைக்கிள் நின்றது. இதையடுத்து நாங்கள் பொலிஸ் நிலையம் உட்பட பல இடங்களுக்கு தகவலைத் தெரியப்படுத்தினோம். இருந்தும் எந்தப் பயனும் இதுவரை இல்லை.

அப்போது எங்களால் வாய் திறக்கமுடியாத நிலை. வாயைத் திறந்தால் இரவு வீட்டுக்கு வந்து சுட்டுவிடுவார்கள். அதனால் வேறு வழியின்றி இருந்துவிட்டோம். இனியும் இருக்கமுடியாது. எமது மகனை மீட்டுத்தாருங்கள்” – என்றனர்.

Related Posts