Ad Widget

இரணைமடு தண்ணீரை யாழிற்கு கொண்டு வரும் திட்டத்தை ஆரம்பித்தார் வடக்கு ஆளுனர்!

வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நேற்று (18) முற்பகல் இரணைமடு நீர்தேக்கம் மற்றும் நீர்த்தேக்க செயற்திட்ட அலுவலகத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது, இரணைமடு குளத்தில் இருந்து வெளியேறும் மேலதிக நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வருவதற்கான செயற்திட்ட முன்மொழிவை தன்னிடம் சமர்ப்பிக்கும்படி, கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர்என்.சுதாகரனிற்கு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஆளுனர் செயலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்-

கடந்த 10ஆம் திகதி கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநர், இரணைமடு நீர்த்தேக்கத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்டிருந்ததுடன் வான்கதவுகளின் திருத்தப்பணிகள் மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள சம்பந்தப்பட்டவர்களுக்கு பணிப்புரைகளை வழங்கியிருந்ததுடன் அது தொடர்பிலான முன்னேற்றங்கள் குறித்து ஆராயும் நோக்கிலேயே நேற்றையதினம் திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.

இரணைமடு நீர்த்தேக்கத்தின் 14 வான்கதவுகளில் 07 வான்கதவுகளில் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து இரணைமடு நீர்த்தேக்கத்தை முழுமையாக ஜனவரி 31 ஆம் திகதி கையளிக்க இரணைமடு நீர்த்தேக்கத்தை புனரமைப்பு செய்த தனியார் நிறுவனம் உறுதியளித்துள்ளதுடன் பெப்ரவரி முதல் தொடர்ச்சியாக 06 மாதங்களுக்கு தன்னார்வ ரீதியான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவற்கும் முன்வந்துள்ளது.

இதேவேளை தற்போது இரணைமடு நீர்த்தேக்கத்தின் 40 வீதமான நீர் மட்டுமே விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருவதுடன் 60 வீதமான நீர் சமுத்திரத்தை சென்றடைவதாக கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளரும் இரணைமடு நீர்த்தேக்க செயற்திட்டத்தின் செயற்திட்ட பணிப்பாளருமாகிய பொறியியலாளர் திரு.என்.சுதாகரன், ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

அதனையடுத்து வீணாக சமுத்திரத்திற்கு செல்லும் 60 வீதமான நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வருவதற்கான விசேட செயற்திட்ட முன்மொழிவை கூடியவிரைவில் தன்னிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்ட ஆளுநர், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் இது தொடர்பில் கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.“ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று முன்தினம் இரணைமடு கமக்காரர் அமைப்பு நடத்திய பொங்கல் விழாவில் கலந்து கொண்ட விவசாய அமைப்புக்கள், கிளிநொச்சி மாவட்டத்திற்கு போதிய நீர் கிடைக்க வழியேற்படுத்திய பின்னரே இரணைமடு நீரை யாழிற்கு கொண்டு செல்ல வேண்டுமென வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts