Ad Widget

இயல்பு நிலையினை உதாசீனம் செய்யாது சுகாதார நடைமுறைகளை பின்பற்றவும் –யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்

தற்போதுள்ள இயல்புநிலையினை உதாசீனம் செய்யாது சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அவதானமாக செயற்படுங்கள் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே க.மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ”யாழ்ப்பாண மாவட்டமானது பொது முடக்கத்தின் பின்னர் சற்று இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது தற்போது மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து மாத்திரமே தடைப்பட்டுள்ளது.

மாவட்டத்துக்குட்பட்ட போக்குவரத்துக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தனியார் துறையினரும் அதேபோல இலங்கை போக்குவரத்து சபையினரும் தங்களுடைய சேவையினை ஆரம்பித்துள்ளனர்.

வடக்கு மாகாணத்துக்குட்பட்ட மாவட்டங்களுக்கிடையிலான சேவைகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றன.

அதே நேரத்தில் அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் மட்டுப்பாடுகளுடன் ஏனைய செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன கல்விச் செயற்பாடுகள் தவிர்ந்த ஏனைய செயற்பாடுகள் யாவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதேநேரத்தில் தனியார் கல்வி செயற்பாடுகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது 200க்கு குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் மாகாண கல்வியமைச்சு மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் அதற்குரிய ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் ஒன்றுகூடும் செயற்பாடுகள் யாவும் நிறுத்தப்பட்டுள்ளன அதேபோல பொது நிகழ்வுகள் மற்றும் குடும்ப நிகழ்வுகளுக்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது இருந்தபோதிலும் தளர்த்தப்பட்டுள்ள காலத்தில் கடந்தகாலங்களில் ஒப்பிடும் போது தொற்று நிலைமை அதிகரித்த நிலை காணப்பட்டது.

எனவே தற்போதுள்ள இயல்புநிலையினை பொதுமக்கள் உதாசீனம் செய்யாது சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் அவதானமாக செயல்பட வேண்டும்.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சுகாதார அமைச்சின் கட்டுப்பாடுகளோடு செயற்படுவதன் மூலம் எதிர்வரும் காலங்களில் இந்த பொது முடக்கத்திற்கு செல்லாது நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இந்துக்களின் நவராத்திரி விரதம் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளது எனவே பொதுமக்கள் கட்டுப்பாடுகளை மீறாது தமது வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும் .

அத்தோடு பொதுமக்கள் தங்களை பாதுகாப்பதோடு தங்களுடைய சமூகத்தையும் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது.

எனவே ஏற்கனவே நமக்கு பொது முடக்கம் தொடர்பான அனுபவம் உள்ளது மீண்டும் ஒருபோதும் பொது முடக்கத்துக்கு வழிவகுக்காது இயல்பான நிலையினை பேணுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Posts