Ad Widget

இன, மத, கட்சி பேதங்களை புறந்தள்ளி இலங்கையர் என்ற உணர்வுடன் வாழ்வோம்

புதியதொரு அரசியல் கலாசாரத்திற்குள் நுழைந்துள்ள இச்சந்தர்ப்பத்தில் இன, மத, கட்சி பேதங்களை புறந்தள்ளிவிட்டு இலங்கை சமூகம் என்ற உணர்வுடன் வருங்காலத்தை எதிர்பார்த்திருக்கும் இச் சந்தர்ப்பத்தில் அழுத்தங்கள் மற்றும் கட்டுப்பாட்டு உணர்வுகளில் இருந்து மீண்டு புத்தாண்டைக் கொண்டாடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தமையானது மிக முக்கியமான விடயமாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவ்வாழ்த்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது-

இது வசந்த காலமாகும். இன, மத பேதமின்றி நாம் அனைவரும் இலங்கையர் என்ற மனோநிலையில் சூரியத் திருநாளைக் கொண்டாடும் எழில்மிகு சந்தர்ப்பமாகும்.

சிங்கள, தமிழ் புத்தாண்டு இலங்கை மக்களின் மிக முக்கியமான கலை, கலாசாரப் பண்டிகையாகும். தொன்றுதொட்டு இயற்கையுடன் ஆன்மீக ரீதியாக பின்னிப்பிணைந்து உழவுத் தொழிலை வாழ்வாதாரமாகக்கொண்டு வாழ்வதற்குப் பழக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு புத்தாண்டு என்பது தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம், சமத்துவம், மகிழ்ச்சி, சௌபாக்கியம் என்பவற்றை விருத்திசெய்யும் தேசியத் திருநாளாகும்.

சிங்கள, தமிழ் புத்தாண்டு இனங்களுக்கிடையே ஒற்றுமையை உறுதிசெய்யும் சமாதானம் மற்றும் மகிழ்ச்சி நிறைந்த சௌபாக்கியம்மிக்க புத்தாண்டாக அமையப் பிரார்த்திக்கின்றேன்.

Related Posts