குண்டுத் தாக்குதலை பயன்படுத்தி நாட்டை தங்களது கைக்குள் கொண்டுவருவதற்கு இனவாதிகளின் பின்புலத்துடன் ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் குழுவொன்று இயங்குகின்றதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நடைபெறுகின்ற போராட்டங்கள் தொடர்பாக தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே இரா.சம்பந்தன் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“அரசினால் நியமிக்கப்பட்டவர்கள் குற்றம் இழைத்து இருப்பார்களாயின் அவ்விடயத்தில் விசாரணையை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பும் கடமையும் ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமே உண்டு.
ஆகவே சர்ச்சையில் சிக்கியுள்ள முஸ்லிம் அமைச்சர் மற்றும் ஆளுநர்கள் குறித்து அவர்களே தீர்மானங்களை எடுக்க வேண்டும். ஆகையால் அரசுக்கு எதிராக எவரும் அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியாது.
இதேவேளை குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர் மற்றும் ஆளுநர்களிடம் நாடாளுமன்றத் தெரிவுக்குழு விசாரணை நடத்தி வருகின்றது.
இந்நிலையில் இனவாதிகள் இதற்கு எதிர்மாறாகச் செயற்பட்டு மக்களிடத்தில் புதிய குழப்பத்திளை தோன்றுவித்து வருகின்றனர்” என சம்பந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.