Ad Widget

இனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு சர்வஜன வாக்கெடுப்பு: கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?- விக்னேஸ்வரன்

இனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு சர்வஜன வாக்கெடுப்பு குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன நிலைப்பாட்டில் உள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொள்கை அடிப்படையில் ஒருமித்த நிலைப்பாட்டை கூட்டமைப்பு முன்னிறுத்தினால் அதனுடன் இணைந்து செயற்பட தாம் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாரம் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.

“நீங்கள் கூட்டமைப்புடன் இணைந்து பயணிப்பதற்கு தயார் என்று சொன்னதாக செல்வம் அடைக்கலநாதன் கூறியிருப்பதாக ஒரு செய்தி வெளிவந்திருக்கிறதே. அது உண்மையா என ஊடகவியலாளரினால் கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், “அப்படி நான் எந்தச் சந்தர்ப்பத்திலும் கூறவில்லை. சில தினங்களுக்கு முன்னர் நான் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் பின்வருமாறுதான் கூறியிருந்தேன், .

‘எமது இனத்தின் நன்மை கருதி, தெரிவுசெய்யப்பட்டுள்ள எமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே சிங்கள, பௌத்த பேரினவாதத்தை எதிர்கொள்வதற்கு கொள்கை அடிப்படையில் ஒன்றுபட்ட ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மிகவும் அவசியமாக இருக்கின்றன. இதற்கு ஒத்துழைப்பு வழங்க நானும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் தயாராக இருக்கின்றோம்’ என்று குறிப்பிட்டிருந்தேன்.

இதன்போது, நான் அழுத்தம் திருத்தமாக கொள்கை அடிப்படையில் என்று குறிப்பிட்டிருக்கின்றேன். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது கொள்கை என்னவென்று குறிப்பிடவேண்டும். இணைந்த வடக்குக் கிழக்கில் சுய நிர்ணய அடிப்படையிலான சமஷ்டித் தீர்வு தரப்பட வேண்டும்.

இன்றேல், இறுதித் தீர்வு தொடர்பாக சர்வதேச மேற்பார்வையின் கீழ் சர்வஜன வாக்கெடுப்பும் அதனடிப்படையில் செயற்பாட்டு நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். இங்கு நடந்த இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச ரீதியான சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இந்த விடயங்களில் இதய சுத்தியுடன் செயற்படும் எந்தக் கட்சியுடனும் ஒத்துழைத்து செயற்படுவதற்கு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி தயாராக இருக்கின்றது. சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதுபற்றி குறிப்பிட்டிருக்கின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுபற்றி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடாதுவிட்டாலும், அதில் வெற்றியீட்டிய சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது தேர்தல் பிரசாரத்தின்போது இதுபற்றி வலியுறுத்தி இருந்தார்கள். ஆகவே, தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயங்களில் தனது நிலைப்பாடு என்னவென்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். தமது செயல்களில் நம்பிக்கை ஏற்படுத்தும் சில நடவடிக்கைகளை செய்யவேண்டும். அதை செல்வம் முதலில் செய்யட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Posts