காய்ச்சல் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 11மாத குழந்தை ஒரு சில மணித்தியாலங்களின் பின் உயிரிழந்துள்ளதாக யாழ்போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
கனிஸ்ரன் கிருஷ்ரவேலா தம்பதிகளின் 11 மாதக்குழந்தையான எஸ்தார் என்ற பெண்குழந்தையே இவ்வாறு உயிரழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கடந்த புதன்கிழமை அதிகாலை 2:00 மணியளவில் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தயார் வழமையாக சிறுகுழந்தைகளுக்கு வழங்கும் பனடோல் சிரப்பினை வழங்கியுள்ளார். மருந்து வழங்கப்பட்ட பின்னர் காய்ச்சல் குணமடைந்திருந்தாக அறியப்பட்டது.
பின்னர் நேற்று முன்தினம் மாலை 4:00 மணியளவில் மீண்டும் காய்சல் ஏற்பட்டதாக பெற்றோர் கூறினர். தொடர்ந்தும் காய்ச்சல் காரணமாக குழந்தை அவதிப்பட்டதை உணர்ந்த பெற்றோர் இரவு 7:30 மணியளவில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்து சென்றுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மணித்தியாலங்களின் பின் குழந்தை சிகிச்சை பலன் இன்றி உயிரழந்துள்ளதாக வைத்தியர்கள் கூறினர்.
இறப்பு விசாரணைகளை யாழ் போதனா வைத்தியசாலையின் இறப்பு அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற் கூற்று பரிசோதனையின் பின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையின் இறப்பு தொடர்பில் வைத்தியசாலையின் சட்டவைத்திய நிபுணர் உருத்திராபதி மயூரதன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது,
குழந்தைக்கு ஏற்பட்ட காய்ச்சல் என்னவென்பது தொடர்பில் அறியப்படவில்லை. குழந்தையின் உடலில் இருந்து இரத்தமாதிரி பெறப்பட்டுள்ளது. அம் மாதிரிகளை கொழும்பிற்கு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.