இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் பெரிய குற்றமாக கருதப்படுகிறது. இந்த வழக்கில் சிக்குகிறவர்களுக்கு அங்கு தயவுதாட்சண்யமின்றி மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு அங்கு மயூரன் சுகுமாரன் என்ற ஆவுஸ்திரேலிய தமிழர் உள்பட போதைப்பொருள் கடத்தில் வழக்கில் சிக்கி மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 பேர் ஒரே நேரத்தில் நுசகம்பங்கன் தீவு சிறையில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டனர். இது உலகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அதே சிறையில் மீண்டும் பலரை சுட்டுக்கொன்று மரண தண்டனை நிறைவேற்ற ஏற்பாடுகள் நடக்கிறது. இது பற்றி மத்திய ஜாவா மாகாண போலீஸ் செய்தி தொடர்பாளர் அலாய்சியஸ் லிலிக் தார்மண்டோ கூறும்போது, “சிறையில் மரண தண்டனை நிறைவேற்ற தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு உஷார்படுத்தப்பட்டுள்ளோம். பலரது மரண தண்டனை நிறைவேற்றப்படலாம்” என்றார்.
ஆனால் எத்தனை பேரது மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது, அவர்களில் வெளிநாட்டினர் யாரும் உண்டா என்பது குறித்த தகவல்களை வெளியிட அவர் மறுத்து விட்டார்.
இருப்பினும் ஒரே நேரத்தில் பலர் சுட்டுக்கொல்லப்படலாம் என வெளியாகியுள்ள தகவல், அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.