தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜிற்கும் இடையில் இன்று கொழும்பில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் உட்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன்,
குறித்த சந்திப்பு திருப்திகரமானதாக இருந்தது என்று கூறினார்.
மேலும் தெரிவிக்கும் போது,
“எமது மக்கள் இன்றைக்கு வடக்கு கிழக்கில் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்து, விஷேடமாக காணி சம்பந்தமான பிரச்சினை, இராணுவத்தின் அதிக பிரசண்ணம், மீள்குடியேற்றம், வீட்டு வசதி போன்ற பிரச்சினைகள் குறித்து அவரிடம் எடுத்துக் கூறினோம்” என்றார்.
இந்த சந்திப்பு குறித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,
“எமது மக்கள் தினமும் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் பற்றி பேசினோம். அரசியல் தீர்வு ஒன்றை பெற வேண்டும் என்று மீண்டும் அவரிடம் கூறினோம்.வடக்கு மீனவர்கள் குறித்தும் பேசினோம். அதை இந்திய அரசினால் மாத்திரமே நிறுத்த முடியும் என்று கூறினோம். இந்தியாவில் உள்ள அகதிகளும் மற்றும் வெளிநாடுகளில் உள்ளவர்களும் விரைவில் இலங்கை வர வேண்டும்.அவர்கள் விரைவில் இலங்கை வருவதற்கு அனைவரும் ஏற்றுக் கொள்ளும் விதமான அரசியல் தீர்வு ஒன்று கிடைக்க வேண்டும்” என்றார்.