Ad Widget

இந்திய மீனவர்கள் விரட்டியடிப்பு?

நடுக்கடலில் இராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை சுற்றிவளைத்த, இலங்கை கடற்படையினர், வலைகளை அறுத்து வீசி, அவர்களை விரட்டியடித்துள்ளதாக, இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் அவ்வப்போது, இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்படுகின்றனர்.

இதுவரை 55 மீனவர்கள் இலங்கை சிறைகளில் உள்ளனர். 130 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில், நேற்றுமுன்தினம் காலை இராமேஸ்வரத்தில் இருந்து 300க்கும் குறைவான விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர்.

அன்றிரவு மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தடுத்து விரட்டியடித்தனர். மீனவர்களை தாக்கியதோடு பத்துக்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த வலைகளை அறுத்து கடலில் வீசினர் என, தமிழக ஊடகமான தினகரன் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், படகுகளில் இருந்த இறால் மீன்களையும் கடற்படையினர் அள்ளி சென்றதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கை கடற்படையின் அத்துமீறல்களால் அச்சமடைந்த மீனவர்கள், அவசர அவசரமாக நேற்று கரை திரும்பினர். இலங்கை கடற்படையால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts