Ad Widget

இந்திய மீனவர்களை விடுவிக்க ஜனாதிபதி உத்தரவு

இந்திய பாராளுமன்ற கூட்டு குழு கூட்டம் கூடியுள்ளதை முன்னிட்டு, இலங்கையின் பாதுகாப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ட்விட்டர் மூலமாகத் தெரிவித்திருக்கின்றார்.

1967733701Untitled-1

இந்திய அரசாங்கத்தினால் 13 இலங்கை மீனவர்கள் திங்களன்று விடுதலை செய்யப்பட்டிருப்பதை வரவேற்றுள்ள அவர், இந்திய பாதுகாப்பில் உள்ள ஏனைய இலங்கை மீனவர்களும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் தமது ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார்.

யாழ்ப்பாணம் நெடுந்தீவு மற்றும் தலைமன்னார் கடற்பரப்பிலும் கைதுசெய்யப்பட்ட 82 மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை மற்றும் மன்னார் நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ள நிலையில், அந்த மீனவர்களை விடுதலை செய்வது பற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ட்விட்டர் மூலமான அறிவித்தல் வெளியாகியிருக்கிறது.

நெடுந்தீவு கடற்பரப்பில் 36 மீனவர்களும் தலைமன்னார் கடற்பரப்பில் 46 மீனவர்களும் கைதுசெய்யப்பட்டு அவர்கள் ஊர்காவற்றுறை மற்றும் மன்னார் மாவட்ட நீதிமன்றங்களில் ஆஜர் செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நெடுந்தீவில் கைது செய்யப்பட்டவர்களை வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிபதியும், தலைமன்னாரில் கைது செய்யப்பட்டவர்களை வரும் 16 ஆம் திகதி வரை தடுத்து வைக்குமாறு மன்னார் நீதிபதியும் உத்தரவிட்டிருக்கின்றனர்.

Related Posts