Ad Widget

இந்திய மீனவர்களும் தென்னிலங்கை மீனவர்களும் வடமராட்சி கிழக்கு பகுதியில் அடாவடி!!

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு மீனவர்களின் கரைவலை மற்றும் இதர வலைகளை இந்திய மீனவர்களும் தென்னிலங்கை மீனவர்களும் அறுத்தெறிவதாகவும், கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் 8 மீனவர்களுடைய சுமார் 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் இவ்வாறு அறுக்கப்பட்டுள்ளதாக கட்டைக்காடு மீனவர் சங்கத் தலைவர் அருளப்பு யோசப் எட்வேர்ட் தெரிவித்தார்.

கடலட்டை பிடிப்பில் ஈடுபடும் தென்னிலங்கை மீனவர்கள் எமது பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, எமது வலைகளை அறுத்து எறிகின்றனர். இதேவேளை றோலர்களில் இந்திய மீனவர்கள் கரை வரையில் வந்து எமது மீனவர்களின் வலைகளை அறுக்கின்றனர்.

முன்னர் கடற்படையினருக்கு அறிவித்தவுடன் அவர்கள் சென்று இந்திய மீனவர்களைக் கைது செய்து வந்தனர். ஆனால் தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் காலம் என்பதால் கடற்படையினர் மீனவர்களைக் கைது செய்ய முன்வரவில்லை.

புதன்கிழமை இரவு 6 மீனவர்களுடைய வலைகளை அறுத்தெறிந்த இந்திய மீனவர்கள், றோலர்களை கரைக்கு கொண்டு வந்து ஹோன் அடித்துவிட்டுச் சென்றனர். 100க்கும் அதிகமான றோலர்கள் எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவதால் எமது மீனவர்கள் தொழிலுக்குச் செல்லாமல் இருக்கின்றனர்.

தென்னிலங்கை மீனவர்கள் வெள்ளிக்கிழமை (07) அதிகாலையில் இரண்டு மீனவர்களுடைய வலைளை அறுத்துள்ளனர். இவற்றைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் நாங்கள் இருக்கின்றோம். தேர்தல் நடைபெறவுள்ளமையால் உரிய தரப்பினரிடம் சென்று முறைப்பாடு தெரிவிக்க முடியவில்லையென அவர் மேலும் கூறினார்.

Related Posts