Ad Widget

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு கூட்டமைப்பினரே காரணம் – டக்ளஸ்

இலங்கைக் கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடித்தொழிலில் ஈடுபடுவதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே காரணம் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

daklas

கைதடியில் அமைந்துள்ள வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியில் நேற்று (01) இடம்பெற்ற உதவும் கரங்கள் நிகழ்ச்சித் திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாண அபிவிருத்திக்கு அரசும், ஆளுநரும் தடையாக இருப்பதாக கூட்டமைப்பினர் கூறிவருகின்றமை ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணலாக இருப்பது போன்று நகைப்பாக உள்ளது.

யாழ். மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வட மாகாண முதலமைச்சர் உரையாற்றும் போது ஹெலியில் வருபவர்களால் அபிவிருத்தியை முன்னெடுக்க முடியாது என தெரிவித்திருந்ததாக யாழிலிருந்து வெளிவரும் தமிழ்ப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

ஆனால், வட மாகாண சபையை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கும், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கும் சென்று வருவதற்கு இலவசமாக ஹெலியின் உதவியை கூட்டமைப்பினர் கேட்டிருந்ததையும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதனிடையே மக்களின் தேவைக்கு ஒருவிதமாகவும் தமது தேவைக்கு ஒருவிதமாகவும் அணுகு முறைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கையாண்டு வருகின்றனர்.

ஆனால், நாம் மக்களின் அரசியல் உரிமை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதையே வலியுறுத்தி வரும் அதேவேளை, எமது இணக்க அரசியல் மூலம் பல்வேறுபட்ட அபிவிருத்தி செயற்றிட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றோம்.

அதுமட்டுமன்றி எமது மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக மேலும் பல உதவித்திட்டங்களை அரசின் ஊடாக பெற்றுத் தருவதற்கு, உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

வடமாகாண ஆளுநர் சந்திரசிறி வடமாகாணத்தின் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்துக்கும் தடையாக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது சுயலாபத்துக்காக விஷமப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அவர்களின் இக்கூற்றானது ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணலாக இருப்பது போன்று நகைப்பாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே இந்திய மீனவர்களின் அத்துமீறியதும் தடைசெய்யப்பட்டதுமான தொழில் நடவடிக்கைகளால் எமது கடற்தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதையும் வளங்கள் அழிக்கப்படுவதையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷவிடம் நான் எடுத்துக் கூறினேன்.

இந்நிலையில் இதுவிடயம் தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி, இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியுடனான கலந்துரையாடலின் போது இந்தியப் பிரதமர் கால அவகாசம் கேட்டிருந்த நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.

ஆனால், அண்மையில் இந்தியப் பிரதமரை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்திருந்தபோது அவர் கேட்டுக் கொண்டதற்கமைவாக கால அவகாசத்தை வழங்குவதாக கூட்டமைப்பினர் தெரிவித்திருந்தனர்.

இதன்காரணமாக தற்போது வடபகுதி கடற்பரப்பில் அத்துமீறியதும் தடைசெய்யப்பட்டதுமான இந்திய மீனவர்களின் தொழிற்றுறை நடவடிக்கைகளால் எமது மீனவர்கள் நாளாந்தம் பல்வேறுபட்ட இடர்பாடுகளை எதிர்நோக்கி வருவதாகவும் இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கால அவகாசம் வழங்கியதே முக்கிய காரணமென்றும் சுட்டிக்காட்டினார்.

வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியின் கைதடி கிளையின் முகாமையாளர் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம்; உரைநிகழ்த்தினார்.

இதில் வாழ்வின் எழுச்சி திணைக்கள பணிப்பாளர் அனுர எஸ் வீரரத்ன, வாழ்வின் எழுச்சி திணைக்கள உதவி ஆணையாளர் மகேஸ்வரன், திட்ட இணைப்பாளர் ரகுநாதன், தென்மராட்சி பிரதேச செயலர் திருமதி அஞ்சலிதேவி, யாழ். மாநகர முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, ஈ.பி.டி.பியின் தென்மராட்சி பிரதேச இணைப்பாளர் சாள்ஸ், அமைச்சரின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குகேந்திரன், ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Posts