Ad Widget

இந்திய மாநிலங்கள் போன்று தீர்வு கோருவதை ஏற்க முடியாது – கஜேந்திரகுமார்

Kajentherakumarஇந்திய மாநிலங்கள் போன்று எமக்கும் தீர்வு கோருவதை ஏற்க முடியாதென்பதுடன், இவ்வாறான தீர்வு தமிழ் மக்களுக்கு சாவு மணியடிப்பதாக அமையுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் தெரிவித்தார்.

இந்தியாவில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிற அதிகாரங்களைப் போன்று இலங்கைத் தீவிலும் அதிகாரங்களை வழங்குவதனூடாக இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியுமென்றும் அதனையே கோருவதாகவும் இரா.சம்பந்தன் இந்தியாவில் தெரிவித்திருந்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே கஜேந்திரகுமார் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘கூட்டமைப்புத் தலைவரின் இந்தக் கோரிக்கையையும் அவரது இந்தக் கருத்தையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அடியோடு நிராகரிக்கிறது. இந்தத் தீர்வை கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முயலுமாயின், எமது மக்களுக்கு அடிக்கின்ற சாவுமணியாக இந்தத் தீர்வு இருக்கும்.

இந்தியாவின் அரசியலமைப்புக்கும் இலங்கையின் அரசியலமைப்புக்கும் இடையில் பாரிய வித்தியாசம் உள்ளது. அத்தோடு, இந்தியாவிலுள்ள நிலைமைகளுக்கும் இங்குள்ள நிலைமைகளுக்கும் எந்த வகையிலும் ஒத்துப்போகாது. இதனைத் தெரிந்துகொண்டும் கூட்டமைப்பு எதற்காக இவ்வாறு செயற்படுகின்றதென்று தெரியவில்லை.

குறிப்பாக தேர்தல் காலத்தில் தனிநாடு கேட்டுப் போராடியதாகவும் சமஷ்டி முறையான தீர்வு வேண்டுமென்றும் மேடைகளில் வாய் கிழிய கத்தும் கூட்டமைப்பினர், தற்போது மட்டும் எதற்காக இந்தியா போன்று தீர்வு வேண்டுமெனக் கேட்கின்றனர். அதாவது தேர்தல் காலத்தில் கூறுவது ஒன்று. தேர்தல் முடிந்த பின்னர் கூறுவதும் செயற்படுவதும் வேறொன்றாக இருக்கிறது.

தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களுடைய விருப்பத்திற்கு மாறாக கூட்டமைப்பினர் செயற்படுவதை நாம் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கமாட்டோம். இதனையே நாம் கூட்டமைப்பிலிருந்து பிரிந்தபோதும் இப்பவும் தெரிவிக்கின்றோம்’ என்றார்.

Related Posts