இந்தியாவின் விசாகா பட்டிணத்தை சாத்தியமான இலக்காக குறிவைத்திருக்கும் தீவிரவாதிகள், கடல்வழித் தாக்குதலை நடத்துவதற்கு இலங்கையை பயன்படுத்த முயற்சிக்கும் தகவல்களை இந்திய ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.
இந்திய புலனாய்வுப் பிரிவை மேற்கோள்காட்டி வன் இந்தியா (oneindia) என்ற இணையத்தளம் இன்று வியாழக்கிழமை இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.
ராடர் தீவிரவாதிகள் என்று அறியப்படுகின்ற ஆயுதக் குழுவினர் ஆந்திர பிரதேஷ் மற்றும் விசாகா பட்டிணத்தை குறிவைத்து செயல்படுவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கடல்வழித் தாக்குதலை நடத்துவதற்கு தென்னிந்தியப் பகுதியையும், ஸ்ரீலங்காவையும் பயன்படுத்துவதற்கும் தீவிரவாதிகளின் கவனம் திரும்பியிருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக அண்மையில் நடைபெற்ற சட்டம், ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தில் ஆந்திர பிரதேஷ் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பொலிஸ் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதிகளின் இலகு தாக்குதல்களை சூட்சுமமான முறையில் நடத்துவதற்கு கடல்மார்க்கம் தகுந்த இடமாக அமையப்பெறுகிறது என்று இந்திய புலனாய்வுப் பிரிவு தெரிவித்திருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
ஐ.எஸ்.ஐ ஆயதக்குழு இதற்காக ஸ்ரீலங்காவில் ஒரு தொகுதியை தயார்படுத்தி வருவதாகவும் தென்னிந்தியாவில் தாக்குதல்களை நடத்துவதே அதன் இலக்கு என்றும் வன் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும் தமிழ்நாட்டில் இவ்வாறான தாக்குதல்களை முகங்கொடுக்க உளவுப்பிரிவு தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ள போதிலும், ஆந்திரபிரதேஷில் உளவு அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்துவது குறித்து புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.